குறுஞ்செய்திவழி இடம்பெற்ற வங்கிசார்ந்த மோசடி வழக்குகளில் 18 முதல் 27 வயதுடைய ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
இம்மாதம் 15, 16ஆம் தேதிகளில் வர்த்தகக் குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகளால் தீவு முழுவதும் மேற்கொண்ட மோசடித் தடுப்பு அமலாக்க நடவடிக்கைகளை அடுத்து, அவர்கள் கைதுசெய்யப்பட்டதாகக் காவல்துறை செவ்வாய்க்கிழமை (ஜனவரி 16) தெரிவித்தது.
முதற்கட்ட விசாரணையில், கைது செய்யப்பட்டவர்கள் பணத்திற்காகத் தங்கள் வங்கிக் கணக்குகளையும் இணைய வங்கி விவரங்களையும் சிங்பாஸ் மறைச்சொற்களையும் பகிர்ந்துகொண்டது தெரியவந்தது.
வங்கியின் கணினிக் கட்டமைப்புக்குள் அனுமதியின்றி நுழைவதற்கு அடையாளம் தெரியாத ஆள்களுக்கு உதவி செய்தது தொடர்பாக அந்த எழுவரில் அறுவர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
அவர்கள் 19 வயதுக்கும் 27 வயதுக்கும் உட்பட்டவர்கள்.
சிங்பாஸ் விவரங்களைப் பகிர்ந்துகொண்ட குற்றத்திற்காக 18 வயது இளையர்மீது நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும்.
தங்களது வங்கிக் கணக்கு அல்லது தொலைபேசி விவரங்களை மற்றவர்கள் பயன்படுத்துவதை ஒருபோதும் அனுமதிக்க வேண்டாம் என்று காவல்துறை பொதுமக்களுக்கு நினைவூட்டியுள்ளது.
ஏனெனில், குற்றங்களுடன் இவை தொடர்புபடுத்தப்பட்டால் அக்குற்றங்களுக்கு அவர்களும் பொறுப்பேற்கும்படி நேரலாம்.
மேலும், ஸ்கேம்ஷில்டு செயலியைப் பதிவிறக்கம் செய்து, பாதுகாப்பு அம்சங்களை நிறுவுமாறும் பொதுமக்களுக்குக் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.