சாங்கி விமான நிலையத்தில் கடந்த டிசம்பர் மாத இறுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் மொத்தம் 177 பேர் மின் சிகரெட்டுகளுடன் பிடிபட்டனர்.
சுகாதார அறிவியில் ஆணையமும் குடிநுழைவுச் சோதனைச்சாவடி ஆணையமும் நான்கு நாள்கள் அந்தச் சோதனை நடவடிக்கையை மேற்கொண்டன.
பிடிபட்ட 177 பேரில், 61 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மற்றவர்கள் தங்களுக்கு மின் சிகரெட்டுகள் இருந்ததைத் தெரியப்படுத்தி அவற்றை வீசியதால், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படவில்லை என்று சுகாதார அமைச்சு, சுகாதார அறிவியல் ஆணையம், குடிநுழைவுச் சோதனைச்சாவடி ஆணையம் ஆகியவை வெளியிட்ட கூட்டு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
சோதனை நடவடிக்கைகள் டிசம்பர் 20, 23, 27, 30ஆம் தேதிகளில் மேற்கொள்ளப்பட்டன.
உச்சப் பயணக் காலத்தின்போது விமான நிலையம் வழி மின் சிகரெட்டுகளைக் கொண்டுவருவதற்கான முயற்சிகளைத் தடுப்பதற்காக அவை நடத்தப்பட்டன.
சோதனை நடவடிக்கையின்போது சாங்கி விமான நிலையத்தின் நான்கு முனையங்களையும் சென்றடைந்த பயணிகளை அதிகாரிகள் கண்காணித்தனர்.
அதிகப் பயணிகள் நடமாட்டம் உள்ள பகுதிகளில், சிங்கப்பூரில் மின் சிகரெட்டுகள் தடைசெய்யப்பட்டுள்ளதைக் காட்டும் பதாகைகளும் மின்னிலக்கத் திரைகளும் வைக்கப்பட்டிருந்தன.
மின் சிகரெட்டுகள் வைத்திருப்போர், பயன்படுத்துவோர் அல்லது வாங்குவோருக்கு $2,000 வரை அபராதம் விதிக்கப்படலாம்.