சட்டவிரோதமாக இயங்கி வந்த கும்பல்களிடம் தங்களின் வங்கிக் கணக்குகளை விற்றதாக அல்லது வாடகைக்கு விட்டதாக எழுவர் மீது ஜனவரி 11ஆம் தேதியன்று குற்றம் சாட்டப்பட்டது.
எட்டா லின் வென்கிங், 19, கேலப் ஷோ கய் லோக், 20, முகம்மது ஃபார்மிருல் முகம்மது ஃபார்ஹான், 20, மார்கஸ் லிம் யு ஹுவீ, 28, ராஸா இஸ்கந்தர் அஷ்கர் மாசெ, 35, லிம் கிம் ஹேங், 44, பிரீத்தா நிவாஷனி எம் ரெச்னம், 52, ஆகிய அந்த ஏழு பேர் மீதும் குற்றம் சாட்டப்பட்டது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள், சட்டவிரோதக் கும்பல்களுக்கு உடந்தையாக இருந்ததற்கு $3,000 வரை பணம் ஈட்டியதாகக் காவல்துறையினர் ஜனவரி 10ஆம் தேதியன்று தெரிவித்தனர்.
தங்களின் ஏடிஎம் அட்டையையும் இணைய வங்கிப் பரிவர்த்தனைக்கான கடவுசொல்லையும் சட்டவிரோதக் கும்பல்களிடம் கொடுத்துத் தங்களின் பெயரில் வங்கிக் கணக்கு திறக்க அனுமதித்ததன் மூலம் வங்கிகளை எழுவரும் ஏமாற்றி உள்ளதாகக் கூறப்படுகிறது.
இவர்கள் மீதான வழக்கு மீண்டும் பிப்ரவரி மாதம் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும்.