கடந்த மார்ச் மாதத்தில் கூட்டுரிமை மறுவிற்பனை வீட்டு விலைகள் 0.4 விழுக்காடு அதிகரித்தன.
கடந்த பிப்ரவரி மாதம் சந்தை மீண்டுவந்ததைத் தொடர்ந்து, அதிகமான வீடுகளும் விற்பனையாயின.
பிப்ரவரி மாதம் பதிவான 0.2 விழுக்காட்டு அதிகரிப்பைக் காட்டிலும், விலை அதிகரிப்பு சற்று உயர்வாக இருந்ததாக ‘ஸ்ஆர்எக்ஸ்’ நிறுவனமும், 99.co என்ற நிலச்சொத்து இணையவாசலும் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் காட்டின.
வீடு வாங்குவோருக்கும் விற்பவர்களுக்கும் இடையே விலை எதிர்பார்ப்புகளில் காணப்பட்ட வேறுபாடுகளும், உயர்வான வட்டி விகிதமும் விலை ஏற்றத்திற்குக் காரணங்களாக இருக்கலாம் என்று சொத்து நிபுணர்கள் கூறினர்.
இதற்கிடையே, கடந்த மார்ச் மாதத்தில் மறுவிற்பனை செய்யப்பட்ட கூட்டுரிமை வீடுகளின் எண்ணிக்கை 17.4 விழுக்காடு அதிகரித்தது.
மார்ச்சில் 883 வீடுகள் கைமாறின. பிப்ரவரியில் அந்த எண்ணிக்கை 752ஆக இருந்தது.
மார்ச்சில் கெப்பல் பேயின் ‘கோரல்ஸ்’ல் உள்ள வீடு ஒன்று, ஆக அதிக விலையில், $8.7 மில்லியனுக்கு விற்கப்பட்டது.