வெளிநாட்டுக்குக் கிட்டத்தட்ட $1.3 மில்லியன் மதிப்பில் பணம் அனுப்பும் சேவையைச் சட்டவிரோதமாக நடத்திவந்த கட்டுமான ஊழியருக்கு மூன்று மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
கள்ளத்தனமாக வழங்கிய சேவையின் மூலம் தான் சம்பாதித்த தொகையான $6,160, சீன நாட்டவரான 34 வயது டு சாங்ஷுனுக்கு அபராதமாகவும் விதிக்கப்பட்டது.
அபராதத்தை டு கட்டத் தவறினால், அதற்குப் பதிலாக மேலும் நான்கு வாரச் சிறை அனுபவிக்க வேண்டியிருக்கும்.
தன் வேலை நண்பர்கள் சார்பாக சிங்கப்பூரிலிருந்து சீனாவுக்கு பணம் அனுப்பும் சேவையை நவம்பர் 2021 ஆண்டு முதல் டு தொடங்கியதாக அறியப்படுகிறது.
பின்னர், அவரது சேவையை ‘வீசேட்’ தளத்தின் வழியாகவும் வாடிக்கையாளர்கள் நாடத் தொடங்கினர்.
பணம் அனுப்பும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் கட்டணம் விதித்ததன் மூலம் மொத்தம் $6,160 டுவுக்குக் கிடைத்ததாகக் கூறப்பட்டது.