கேலாங்கில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த குழுவின் தலைவராக இருந்த துணைக் காவற்படை அதிகாரி ஒருவர், அந்தப் பகுதியிலிருந்து கைப்பற்றப்பட்ட சட்டவிரோதமான பாலியல் ஊக்க மருந்துகளைத் தமது சொந்தப் பயன்பாட்டிற்காக எடுத்துக்கொண்டார்.
அந்த பாலியல் ஊக்க மருந்துகளை உட்கொண்ட முகம்மது அரிஸ் ஜலில், 66, மே 7ஆம் தேதி நம்பிக்கை மோசடிக்கான ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார்.
அவருக்கு ஆறு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சிங்கப்பூரரான அவர் அந்த வழக்குடன் தொடர்புடைய நான்கு ஆடவர்களில் ஒருவர். அவர் சென்ற ஆண்டு நவம்பர் மாதம் நீதிமன்றத்தில் முன்னிலையானார்.
அவர் ‘செர்ட்டிஸ் சிஸ்கோ’ பாதுகாப்பு நிறுவனத்தில் தற்போது துணைக் காவல் அதிகாரியாகப் பணிபுரியவில்லை.
மலேசியரான திருமுருகன் சண்முகம், 30, சீனக் குடிமகன் சென் ஸிசியோங், 32, ஆகிய மற்ற இரண்டு ஆடவர்களுக்கான வழக்குகள் தொடர்கின்றன.
திருமுருகன் ‘செர்ட்டிஸ் சிஸ்கோ’வின் முன்னாள் துணைக் காவற்படை அதிகாரி. சென், பாலியல் ஊக்க மருந்துகளின் விற்பனையாளராக இருந்தார்.
குற்றம் நடந்தபோது, நான்காவது ஆடவரான முகம்மது ஹஃபிஸுடின் ஹனாப்பியா, 30, பாதுகாப்பு அதிகாரியாகப் பணிபுரிந்துகொண்டிருந்தார்.
தற்போது ‘செர்ட்டிஸ் சிஸ்கோ’வில் பணிபுரியாத ஹஃபிஸுடினுக்கு, கடந்த ஜனவரி மாதத்தில் மூன்று மாதங்கள், இரண்டு வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
நம்பிக்கை மோசடிக்காக, குற்றவாளி ஒருவருக்கு 15 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.