குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் துவாஸ் சோதனைச்சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் தீர்வை செலுத்தப்படாத 13,000 சிகரெட் பெட்டிகளைக் கடப்பதற்கான முயற்சியை முறியடித்துள்ளது.
சென்ற ஆண்டு கைப்பற்றப்பட்ட ஆகப் பெரிய எண்ணிக்கையிலான கள்ள சிகரெட்டுகள் அவை.
மலேசியாவில் பதிவான லாரி ஒன்றில் கள்ள சிகரெட் பெட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக ஆணையம் ஃபேஸ்புக் பதிவு ஒன்றில் தெரிவித்தது.
சென்ற ஆண்டு டிசம்பர் 21ஆம் தேதி அதிகாரிகள் அந்தக் கள்ள சிகரெட் பெட்டிகளைக் கண்டுபிடித்தனர். அதன் பின் அந்த லாரியில் கூடுதல் சோதனைகள் நடத்தப்பட்டன.
மேல் விசாரணைக்காக இந்த விவகாரம் சிங்கப்பூர் சுங்கத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஆணையம் கூறியது.
சென்ற ஆண்டின் தொடக்கத்தில், ஜனவரி 18ஆம் தேதியன்று துவாஸ் சோதனைச்சாவடியில் அதிகாரிகள் 12,708 கள்ள சிகரெட் பெட்டிகளைப் பறிமுதல் செய்தனர். அந்த நேரத்தில் அந்த ஆண்டு கைப்பற்றப்பட்ட ஆகப் பெரிய எண்ணிக்கையிலான கள்ள சிகரெட்டுகள் அவை.
அதே ஆண்டு நவம்பர் மாதத்தில், உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடி வழியாக சிங்கப்பூருக்குள் தீர்வைசெலுத்தப்படாத சிகரெட்டுகளை கடத்துவதற்கான மூன்று முயற்சிகளை ஒரே நாளில் ஆணையம் முறியடித்தது.
சுங்கச் சட்டம், பொருள், சேவை வரி சட்டம் ஆகியவற்றின்கீழ் வரிசெலுத்தப்படாத பொருள்களை வாங்குவது, விற்பது, ஏற்றுவது, அனுப்புவது, வைத்திருப்பது, போன்றவை கடும் குற்றங்களாகக் கருதப்படுகின்றன.
அத்தகைய குற்றங்களுக்கு, செலுத்தப்படாத பொருள், சேவை வரியின் தொகைக்கு 40 மடங்கு அதிகமான தொகை அபராதமாகவோ ஆறாண்டுவரை சிறைத்தண்டனையோ இரண்டுமோ விதிக்கப்படலாம்.