சுற்றுப்புறப் பொறியாளராக 14 ஆண்டுகள் பணியாற்றிய திரு லின் குவான்ஹொங் இருமுறை ஆட்குறைப்பு செய்யப்பட்டார்.
சென்ற ஆண்டு நடுப்பகுதியில் இரண்டாவது முறை ஆட்குறைப்பு செய்யப்பட்டபோது அவர் தமது வாழ்க்கைத் தொழிலையே மாற்றி நிதி ஆலோசகராகப் பணிபுரிய முடிவுசெய்தார்.
கிட்டத்தட்ட அரையாண்டுக்கு வேலை இல்லாமல் இருந்த 44 வயதான திரு லின், நான்கு பேர் கொண்ட அவரது குடும்பத்தைச் சமாளிப்பதில் சவால்களை எதிர்நோக்கினார். அவர் பகுதிநேரமாகப் பணிபுரிந்த தமது மனைவியின் வருமானத்தை நம்பியிருந்தார்.
முழுநேரமாகப் பணிபுரிவது தங்களின் நிதிச்சுமைக்கு ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கும். இருப்பினும், திருமதி லின் பள்ளியிலிருந்து வீடு திரும்பும் இரண்டு மகன்களைக் கவனிக்க வேண்டியிருந்தது, குறிப்பாக தங்களின் இளைய மகனான ஏழு வயது லின் ஷெங்கை.
இருப்பினும், இப்போது திரு லின்னுக்குப் புதிய வேலை உண்டு. திருமதி லின்னால் முழுநேர வேலையைத் தேட முடிகிறது.
லின் ஷெங், ‘மைண்ட்சேம்ப்ஸ்’ பள்ளி வழங்கும் உபகாரச் சம்பளத்தின் மூலம் பள்ளிக்குப் பிந்திய பராமரிப்பில் சேர்க்கப்படவிருப்பதே அதற்குக் காரணம்.
இதே உபகாரச் சம்பளத்தினால் 44 வயதாகும் தெரேசா போஸின் குடும்பமும் பயனடைகிறது. பகுதி நேரமாக பணியாற்றும் இவருக்கு இரண்டு மகன்கள். பிள்ளைகள் பள்ளியிலிருந்து வந்தபின் அவர்களை கவனித்துக் கொள்வதற்காகவே பகுதிநேரமாக பணியாற்றுகிறார் திருவாட்டி தெரேசா. “இந்த உபகாரச் சம்பளத்தின் மூலம் பிள்ளைகளை பள்ளிக்கு பிந்திய பராமரிப்பில் சேர்ப்பதால் என்னால் முழு நேர பணிக்கு செல்லமுடியும். குடும்பத்தின் நிதி நிலைமையும் உயரும்” என்று இவர் கூறினார்.
‘மைண்ட்ஸ்பேஸ்’இன் அதிகாரபூர்வ திறப்புவிழாவை ஒட்டி, $200,000 மதிப்புள்ள உபகாரச் சம்பளங்கள் மரின் பரேட் குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டன.
சிங்கப்பூரில் 2022ஆம் ஆண்டு ஜனவரியில் ‘மைண்ட்சேம்ப்ஸ்’, தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக தொடங்கிய பள்ளிக்குப் பிந்திய நிலையங்களின் கட்டமைப்பே, ‘மைண்ட்ஸ்பேஸ்’.
கலாசார, சமூக, இளையர்துறை அமைச்சரும், மரின் பரேட் குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான எட்வின் டோங், பாய லேபாரின் ‘கினெக்ஸ்’ பேரங்காடியில் நடைபெற்ற உபகாரச் சம்பளத் தொடக்க விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார்.
‘மைண்ட்சேம்ப்ஸ்’ உபகாரச் சம்பளத் திட்டம், ‘முன்னேறும் சிங்கப்பூர் திட்டத்தின்’ ஒரு பெரிய உதாரணம் என்று திரு டோங் தமது உரையில் கூறினார்.
ஒருவரையொருவர் கவனித்துக்கொள்ளவும், ஆதரிக்கவும் தனிநபர்கள், குடும்பத்தார், தொழில் நடத்துபவர்கள், சமூக உறுப்பினர்கள் ஆகியோரின் உதவி அரசாங்கத்துக்குத் தேவைப்படுவதாகவும் திரு டோங் சொன்னார்.