கணினி ஊடுருவிகள் ‘பேஸ்மேக்கர்’ போன்ற உயிரைக் காக்கும் சுகாதாரப் பராமரிப்புக் கருவிகளைக் குறிவைப்பது அறிவியல் புனைகதை அல்ல. வருங்காலத்தில் அது உண்மையிலேயே நடக்கக்கூடிய ஒன்றாக அமையலாம்.
அத்தகைய சூழ்நிலைகளுக்கு ஆயத்தமாக, லண்டனின் இம்பீரியல் கல்லூரியையும், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தையும் சேர்ந்த விஞ்ஞானிகள், மருத்துவக் கருவிகளின் இணையப் பாதுகாப்பை மேம்படுத்த $20 மில்லியன் செலவிலான திட்டத்தைத் தொடங்கவுள்ளனர்.
அந்த நான்கு ஆண்டு ‘இன்-சைஃபர்’ திட்டம் சிங்கப்பூரில் லண்டனின் இம்பீரியல் கல்லூரி புதிதாகத் தொடங்கிய ஆய்வு, புத்தாக்க நிலையத்தின்கீழ் இடம்பெறும் முதல் ஆய்வுத் திட்டமாகும்.
அந்தத் திட்டம் இங்குள்ள பிரிட்டிஷ் தூதரகத்தில் திங்கட்கிழமை (ஜனவரி 8) தொடங்கப்பட்டது.
‘பேஸ்மேக்கர்’ போன்ற ஒருவரின் உடலில் பொருத்தக்கூடிய கருவிகளைப் பாதுகாக்க மேம்பட்ட வழிகளை அறிமுகப்படுத்துவதைத் தவிர, ‘இன்-சைஃபர்’ திட்டம் சுகாதாரப் பராமரிப்பு முறைகள், உடலில் வைக்கக்கூடிய மின்னணுக் கருவிகள் ஆகியவற்றின் தரவுகளையும் பத்திரமாகப் பாதுகாக்க நோக்கம் கொண்டுள்ளது.
சர்க்கரை அளவைக் கண்காணிக்கும் கருவிகள் போன்ற பலவிதக் கருவிகள் ஆய்வில் பயன்படுத்தப்படும். இம்பீரியல் கல்லூரியின் பேராசிரியர் அனில் அந்தோணி பரத்தும் நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் லியூ யாங்கும் திட்டத்தை வழிநடத்துவார்கள்.
வெவ்வேறு நாடுகளின் மருத்துவச் செயல்முறைகளில் உள்ள ரகசியத்தன்மையால் உலகில் நிலவும் இணையத் தாக்குதல்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை குறித்து தற்போது எந்தப் புள்ளிவிவரங்களும் இல்லை என்று பேராசிரியர் லியூ கூறினார்.
இருப்பினும், மருத்துவக் கருவிகளும் செயல்முறைகளும் இணைப்பையும் நுண்ணறிவையும் நோக்கி மேம்பட்டுவரும் நிலையில் ஆண்டுக்கு ஆண்டு அவை எதிர்நோக்கும் இணையத் தாக்குதல்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருவதாக அவர் சொன்னார்.