தீவு முழுவதிலும் உள்ள என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் வரும் ஜனவரி 18ஆம் தேதியிலிருந்து சீனப் புத்தாண்டு காலம் வரை 13 பிரபல கடல் உணவுகளும் காய்கறிகளும் விலையில் மாற்றமின்றி ஒரே விலையில் விற்கப்படும் என ஃபேர்பிரைஸ் குழுமம் வியாழக்கிழமை தெரிவித்தது.
சிங்கப்பூரர்கள் அதிகரித்துவரும் செலவினங்களைச் சமாளிக்க உதவும் வகையில் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக குழுமம் கூறியது.
“சீனப் புத்தாண்டு காலத்தின்போது விலையில் ஏற்றம் காணும் பொருள்களில் கடல் உணவுகளும் காய்கறிகளும் அடங்கும்,” என ஃபேர்பிரைஸ் குழும இயக்குநர்களில் ஒருவரான திரு ஆண்டி சாங் குறிப்பிட்டார்.
“ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் விற்கப்படும் பொருள்களின் விலையை ஈரச் சந்தையில் விற்கப்படும் பொருள்களுடன் ஒப்பிட்டோம். ஏனெனில், விழாக் காலங்களில் காய்கறிகள் மற்றும் கடல் உணவுகள் போன்ற பொருள்களின் விலைகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம்,” எனத் திரு சாங் கூறினார்.
“விலை நிர்ணயத்தின் அடிப்படையில் நாங்கள் போட்டித்தன்மையுடன் இருக்கிறோம் என்பதை உறுதிப்படுத்த சீனப் புத்தாண்டு ஒரு நல்ல வாய்ப்பு என்பதை உணர்ந்து நாங்கள் இந்த நடவடிக்கையை மேற்கொண்டோம்,” என அவர் மேலும் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டு சீனப் புத்தாண்டு காலத்தின்போது மீன், கடல் உணவுகள் ஆகியவற்றில் விலையில் மாற்றம் ஏதுமில்லாமல் ஒரே விலையில் குழுமம் விற்பனை செய்தது என்றும் வாடிக்கையாளர்களிடம் கருத்துகள் பெற்ற பிறகு அந்தப் பட்டியலில் இவ்வாண்டு தேர்ந்தெடுக்கப்பட்ட சில காய்கறிகள் சேர்க்கப்பட்டன என்றும் அவர் எடுத்துரைத்தார்.