சிங்கப்பூருக்கும் டார்வினுக்கும் இடையே 18 ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பர் மாதம் முதல் குவான்டாஸ் விமான நிறுவனம் மீண்டும் நேரடி விமானச் சேவைகளைத் துவங்கவிருக்கிறது.
தற்போது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மட்டுமே சிங்கப்பூருக்கும் டார்வினுக்கும் இடையே சேவை வழங்குகிறது.
சட்டமுறை ஒப்புதல் கிடைத்தால் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையத்திற்கும் ஆஸ்திரேலியாவின் வடபகுதியான டார்வினுக்கும் இடையிலான ஐந்து மணி நேர விமானப் பயணங்கள், இவ்வாண்டு டிசம்பர் 9ஆம் தேதியிலிருந்து தொடக்கத்தில் வாரம் ஐந்து நாள்களுக்கு இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டது.
2025ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து ஒவ்வொரு நாளும் அந்த விமானப் பயணங்கள் இடம்பெறும் என்று குவான்டாஸ் அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.
சிங்கப்பூருக்கும் டார்வினுக்கும் இடையிலான விமானப் பாதையில் பயணம்செய்ய எம்பிரேயர் இ190 ரக வட்டார விமானங்களைப் பயன்படுத்தப்போவதாக குவான்டாஸ் கூறியுள்ளது.
பிரேசிலிய உற்பத்தி நிறுவனத்திலிருந்து வரும் அந்த விமானங்கள் இருக்கை எண்ணிக்கையைப் பொறுத்தவரை சாங்கி விமான நிலையத்தில் உள்ள ஆக சிறிய பயணி விமானங்களாக இருக்கும்.
இருவழிப் பயணத்திற்கான கட்டணங்கள் $792இலிருந்து தொடங்கும். விமானப் பயணச் சீட்டுகளின் விற்பனை ஜனவரி 17ஆம் தேதி தொடங்கியது.
இதற்கு முன்னர் கடைசியாக 2006ஆம் ஆண்டில் இரண்டு நகரங்களுக்கு இடையே குவான்டாஸ் இடைவிடா விமானச் சேவையை வழங்கியது.