புதன்கிழமை மதியம் நடந்த வாகன விபத்தில், சிதைந்துபோன லாரியில் சிக்கியிருந்த 44 வயது ஆடவரை சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினர் மீட்டனர்.
புக்கிட் தீமா விரைவுச்சாலையை நோக்கிச்செல்லும் சிலேத்தார் விரைவுச்சாலையில் நடந்த அந்த விபத்து பற்றி பிற்பகல் 3.20 மணியளவில் தகவல் கிடைத்ததாகக் குடிமைத் தற்காப்புப் படையின் ஃபேஸ்புக் பதிவு தெரிவித்தது.
கனரக லாரியும் சரக்கு லாரியும் மோதிக்கொண்ட அந்த விபத்தில், சரக்கு லாரி சிதைந்து போயிருந்தது.
சரக்கு லாரியின் ஓட்டுநர் தனது இருக்கையில் சிக்கிக்கொண்டிருந்தார். வாகனத்தின் முன்பகுதி உட்புறமாக நசுங்கிப் போயிருந்ததால், அவரது கால்கள் இரண்டும் மாட்டிக்கொண்டிருந்தன.
குடிமைத் தற்காப்புப் படையின் அவசர மருத்துவப் பணியாளர்கள் அவருக்கு முதலுதவி அளித்தனர். மீட்புப் பணியாளர்கள் அவரை விடுவிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டனர்.
ஓட்டுநரின் இடது பாதம் சிக்கிக்கொண்டிருந்த கிளட்ச் மிதிகட்டை வெட்டி அகற்றப்பட்டது.
ஓட்டுநர் கூ டெக் புவாட் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்துகிறது.