சிங்கப்பூர் அதிகாரிகள் அம்பலப்படுத்திய $2.8 பில்லியன் கள்ளப்பண விவகாரத்தில் தொடர்புடைய நான்கு விலையுயர்ந்த ஆடம்பர கார்கள் புக்கிட் தீமா ரோடு அருகே உள்ள தேர்ட் அவென்யூவில் இருக்கும் ஒரு பங்களாவில் இருந்து கட்டி இழுத்துச் செல்லப்பட்டன.
காவல்துறை அதிகாரிகள், 19,000 சதுர அடிக்கும் மேற்பட்ட பரப்புள்ள பரந்து விரிந்திருக்கும் அந்தப் பங்களாவில் இருந்து புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் இரண்டு ரோல்ஸ்-ராய்ஸ் கார்களையும் போர்சே கார் ஒன்றையும் டொயோட்டா ஆல்ஃபர்ட் கார் ஒன்றையும் கொண்டு சென்றார்கள்.
அந்தக் கார்களின் மதிப்பு $4.7 மில்லியனுக்கும் அதிகம் என்று வர்த்தக விவகாரத்துறை அதிகாரி ஒருவர் கடந்த செப்டம்பர் மாதம் தாக்கல் செய்த வாக்குமூலத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
அந்தப் பங்களாவை வனாட்டு நாட்டைச் சேர்ந்த சு ஜியாங்ஃபெங், 35, என்பவர் வாடகைக்கு எடுத்து இருந்தார். இந்த மாபெரும் கள்ளப்பண விவகாரம் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டு இருக்கும் 10 பேரில் இவரும் ஒருவர்.
கைப்பற்றப்பட்ட நான்கு கார்களும் பயோனிர் ரோட்டுக்கு அருகே உள்ள தளவாடப் போக்குவரத்து மையம் ஒன்றுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு அவை நிறுத்தி வைக்கப்பட்டன என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் தெரிவித்தது.
இந்தக் கள்ளப் பணம் விவகாரம் தொடர்பில் விற்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பலவற்றைத் தாங்கள் இரண்டு இடங்களில் இருந்து கைப்பற்றியதாக புதன்கிழமை காவல்துறை தெரிவித்தது.
அவற்றில் நான்கு கார்களும் 56 பியர்பிரிக்ஸ் அலங்கார விளையாட்டுப் பொருள்களும் அடங்கும். இரண்டு இடங்களில் மற்றொன்று எது என்பதை காவல்துறை தெரிவிக்கவில்லை.
புலன்விசாரணை நடந்து வருவதையொட்டி அதன் ஒரு பகுதியாக கைப்பற்றப்பட்ட பொருள்களை காவல்துறை பொருத்தமான இடங்களுக்கு கொண்டு செல்கிறது. இதனால் அந்தப் பொருள்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் தடுக்கப்படும் என்று காவல்துறை தெரிவித்தது.
இந்தக் கள்ளப்பண விவகாரம் தொடர்பில் விற்கக் கூடாது என்று 62 வாகனங்களுக்கும் 152 சொத்துகளுக்கும் அதிகாரிகள் உத்தரவு பிறப்பித்து இருக்கிறார்கள். அவற்றில் அந்த நான்கு கார்களும் அடங்கும்.
இப்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட அந்த வாகனங்களும் சொத்துகளும் $1.24 பில்லியனுக்கும் மேற்பட்ட மதிப்புடையவை என்று தெரியவந்து இருக்கிறது.