பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் வந்தடைந்தார். இங்கு தனது அதிகாரத்துவப் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னதாக ஜூவல் சாங்கி விமான நிலையத்தை பார்வையிட்டார்.
ஜூவலில் உள்ள உட்புற நீர்வீழ்ச்சியைப் பார்வையிட்ட வேல்ஸ் இளவரசர், அருகிலுள்ள உட்புற தோட்டத்தில் பொது மக்களைச் சந்தித்தார்.
இளவரசர் வில்லியம் மாலை 5 மணியளவில் சாங்கி விமான நிலையத்தில் தரையிறங்கினார்.
மாலை 5.30 மணியளவில் அவர் ஜூவலை அடைந்ததும் கூடியிருந்த மக்கள் ஆரவாரம் செய்யத் தொடங்கினர். அவருடன் வெளியுறவு, தேசிய வளர்ச்சிக்கான மூத்த அமைச்சர் திருவாட்டி சிம் ஆன் உடன் இருந்தார்.
பிரிட்டிஷ் சிம்மாசனத்தின் அடுத்த வாரிசான 41 வயது இளவரசர் வில்லியமைப் பார்க்க 100க்கும் மேற்பட்ட மக்கள் கூடியிருந்தனர். சிலர் பொம்மைகள், அட்டைகள் போன்ற பரிசுகளைக் கொண்டு வந்திருந்தனர்.
இளவரசர் வில்லியமின் வருகையை முன்னிட்டு அங்கு நடப்பட்ட டெம்புசு மரத்தை ஜுவல் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் ஃபாங் இளவரசருக்குக் காட்டினார்.
வெளிநாட்டு பிரமுகர் ஒருவரின் வருகையைக் குறிக்கும் வகையில் ஜூவலில் மரம் நடப்படுவது இதுவே முதல் முறை என ஜுவல் பேச்சாளர் தெரிவித்தார்.
இளவரசர் வில்லியம் புதன்கிழமை வரை சிங்கப்பூரில் இருப்பார்.
இளவரசர் வில்லியம் தனது வருகையின்போது அதிபர் தர்மன் சண்முகரத்னம், பிரதமர் லீ சியன் லூங் ஆகியோரைச் சந்திப்பார்.
வேல்ஸ் இளவரசர் சிங்கப்பூர் வருவது இது இரண்டாவது முறை. 2012ஆம் ஆண்டு மனைவி கேத்தரினுடன் சிங்கப்பூர் வந்திருந்தார்.