காஸாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனைக்குள் நுழைந்து இஸ்ரேலிய ராணுவம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதனால் பல விளைவுகள் ஏற்பட்டுள்ளன.
இதனால் சிங்கப்பூர் அரசாங்கம் வருத்தமடைந்துள்ளது.
சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதில் போரால் ஏற்பட்டுள்ள விளைவுகள் குறித்து ‘வருந்துவதாக’ கூறியுள்ளது.
ஏறக்குறைய ஒரு நாள் முழுவதும் முற்றுகையிட்டு புதன்கிழமை அன்று இஸ்ரேலிய ராணுவம் காஸாவின் மிகப்பெரிய மருத்துவமனைக்குள் நுழைந்ததால் அங்கு சிக்கியுள்ள அப்பாவி மக்களின் பாதுகாப்பு குறித்து உலகளாவிய கவலை ஏற்பட்டது.
மருத்துவமனையில் தண்ணீர், உணவு, குழந்தைகளுக்கு பால் போன்ற அத்தியாவசியப் பொருள்கள் எதுவும் இல்லை என்று காஸா சுகாதார அமைச்சின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள்காட்டி ராய்ட்டர்ஸ் கூறியது.
அல்-ஷிஃபா மருத்துவமனையில் 650க்கும் மேற்பட்ட நோயாளிகள் உள்ளனர். இஸ்ரேல், போர் விமானங்கள் மூலமாகவும் குண்டுகளை வீசியும் தொடர்ந்து காஸாவைத் தாக்கி வருகிறது.
இந்த நிலையில் சிங்கப்பூர் அமைச்சின் அறிக்கையில் காஸாவில் மனிதாபிமான நிலைமை மோசமடைந்து வருவதைக் குறித்து ஆழ்ந்த கவலையில் இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.
அக்டோபர் 7ஆம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் திடீர் தாக்குதல் நடத்தியதில் 1,200க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். 240க்கும் மேற்பட்டவர்களை ஹமாஸ் பிணைப் பிடித்து வைத்துள்ளதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.
இதனால் இஸ்ரேல் பல வாரங்களாக பதிலடி கொடுத்து வருகிறது. இதில் ஏராளமான பொதுமக்கள் சிக்கி உயிரிழந்து வருகின்றனர்.
ஐநா பாதுகாப்பு மன்றம், 2712 தீர்மானத்தை ஏற்றுக் கொண்டதை சிங்கப்பூர் வரவேற்பதாக அறிக்கை கூறியது.
மனிதாபிமான அடிப்படையில் அவசரமாக போர் நிறுத்தத்தை நீட்டிக்க வேண்டும் என்று அந்த தீர்மானம் வலியுறுத்துகிறது.
இந்த தீர்மானம் புதன்கிழமை அன்று ஐநா பாதுகாப்பு மன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
“காஸா முழுவதும் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உடனடியாக, பாதுகாப்பான, தடையற்ற மனிதாபிமான உதவிகளை வழங்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்,” என்று சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சின் அறிக்கை கேட்டுக் கொண்டது.
“காஸாவில் உள்ள மருத்துவமனை வசதிகள் மற்றும் பொதுமக்களை பாதுகாக்க இஸ்ரேல் ஆன அனைத்தையும் செய்ய வலியுறுத்துகிறோம். மருத்துவமனை, பள்ளி உள்ளிட்ட பொதுமக்களுக்கான இடங்கள் பாதுகாக்கப்பட வேண்டும்.
“அதே சமயத்தில் ஹமாஸ் தனது ராணுவ நடவடிக்கைகளுக்கு அத்தகைய இடங்களையும் பொதுமக்களை கேடயமாகவும் பயன்படுத்தக் கூடாது. காஸாவில் உள்ள பிணைக் கைதிகள் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்,” என்று அமைச்சின் அறிக்கை கூறியது.