இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில் மோசடி அழைப்புகள் என்ற சந்தேகத்தின் பேரில் கிட்டத்தட்ட 180 மில்லியன் தொலைபேசி அழைப்புகளை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தடுத்துள்னன.
அத்துடன், இதே காலகட்டத்தில் மோசடிக்காரர்களால் பயன்படுத்தப்படுகிறது என்று நம்பப்படும் 3,700 கைப்பேசி எண்களின் தொடர்புகளை காவல்துறையினர் தந்த தகவலின் அடிப்படையில் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் துண்டித்துள்ளன.
இதை நவம்பர் 22ஆம் தேதி உள்துறை துணை அமைச்சர் சுன் ஸுவெலிங் நாடாளுமன்த்தில் தெரிவித்தார்.
இயோ சூ காங் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் திரு யிப் ஹோன் வெங் கேட்ட கேள்விக்கு பதிலளித்தார் திருவாட்டி சுன்.
தொடர்ந்து பேசிய திருவாட்டி சுன், அக்டோபர் மாதம் வரை மோசடிக்கு எதிரான ஸ்கேம்ஷீல்ட் செயலி சிங்கப்பூரில் 750,000முறை பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளதாக விளக்கினார். இது தொலைத்தொடர்பு நிறுவனங்களின் நடவடிக்கைக்கு உறுதுணையாக அமைந்துள்ளதை அவர் சுட்டினார்.
இந்தச் செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டது 2022ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலிருந்து கணிசமாக அதிகரித்துள்ளதாகவும் திருவாட்டி சுன் கூறினார்.
இந்த ஸ்கேம்ஷீல்ட் செயலி 2020ஆம் ஆண்டு அறிமுகமானது. இந்தச் செயலியின் மூலம் மோசடிக் குறுந்தகவல்கள், மோசடிக்காரர்கள் தங்கள் சட்டவிரோத நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தும் தொலைபேசி எண்கள் ஆகியவற்றை அடையாளம் கண்டு தடுத்துவிடும்.
இந்தச் செயலி 2022ஆம் ஆண்டு மார்ச் முதல் மோசடிகளில் தொடர்புடைய 80,000 தொலைபேசி எண்களை கோடிகாட்டி தடுத்திருப்பதாக திருவாட்டி சுன் தெரிவித்தார்.