பள்ளியின் வலைப்பந்து நட்சத்திரம்; தலைமைச் சட்டாம்பிள்ளை; தமிழ்மொழிப் போட்டிகளில் வாகை சூடுபவர். இப்படித் தொடக்கப்பள்ளி வாழ்க்கையை முழுமையாக நிறைவுசெய்துள்ள ரிவர்வேல் தொடக்கப்பள்ளி மாணவி வீணாக்க்ஷினி உமாபதி சங்கர், 12, இறுதியாண்டுத் தேர்வு முடிவுகள் புதன்கிழமையன்று (நவம்பர் 22) வெளியான நிலையில், உயர்நிலைப் பள்ளியில் அடியெடுத்து வைக்கவுள்ளார்.
எட்டு வயதில் பள்ளியில் முதன்முதலாக வலைப்பந்து விளையாட்டைக் கண்ட வீணாக்க்ஷினி தானும் வலைப்பந்து வீராங்கனையாக ஆசைப்பட்டார். சக மாணவர்களின் ஊக்கமும் பெற்றோரின் ஆதரவும் இவரைப் பள்ளியின் வலைப்பந்து அணியின் தலைவராக்கியது.
தமிழ்ப்பாடத்தில் உச்ச மதிப்பெண்ணான அடைவுநிலை 1 (AL1) பெற்றுள்ள வீணாக்க்ஷினி, உயர்தமிழிலும் உன்னதத் தேர்ச்சி பெற்றுள்ளார். தாய்மொழியான தமிழை நேசிப்பதாகக் கூறும் இவர், பள்ளிப் போட்டிகளிலும் தமிழ் அமைப்புகளின் மொழிப் போட்டிகளிலும் பங்கேற்றுள்ளார்.
“வாரத்திற்கு ஒருமுறை பள்ளி நூலகம் அல்லது பொது நூலகம் செல்வேன். குறைந்தது இரண்டு நூல்களையாவது இரவல் பெறுவேன். எ.சோதி நூல்கள் எனக்குப் பிடிக்கும்,” என்றார் இவர்.
தொடக்கப்பள்ளி இறுதித்தேர்வை இவ்வாண்டு எழுதிய 38,088 மாணவர்களில் 98.4 விழுக்காட்டினர் தேர்ச்சி பெற்றுள்ளனர். தொடக்கநிலைக் கல்வி நிலையங்களாகத் திகழும் நான்கு ‘மதராசா’ இஸ்லாமிய பள்ளிகளில் தேர்வு எழுதிய 338 மாணவர்களில் 335 பேர் தேர்ச்சி அடைந்திருப்பதாக சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றம் தெரிவித்தது.
தொடக்கப்பள்ளி இறுதியாண்டுத் தேர்வுகளுக்கு மூன்றாவது ஆண்டாக அடைவுநிலை (ஏஎல்) மதிப்பீட்டு முறை பின்பற்றப்பட்டு வருகிறது.
இந்நிலையில், உயர்நிலைப் பள்ளியில் பாட அடிப்படையிலான தரம் பிரித்தல் அடுத்த ஆண்டு முதல் முழுமையாக இடம்பெறும்.
உயர்நிலைப் பள்ளியில் தற்போதுள்ள விரைவுநிலை, வழக்கநிலை (ஏட்டுக்கல்வி), வழக்கநிலை (தொழிற்கல்வி) என்ற வகைப்பாடு அகற்றப்படும். அதற்குப் பதிலாக 1, 2, 3 என்ற மூன்று பிரிவுகளில் கல்வி அமைச்சு மாணவர்களைப் பள்ளிகளுக்கு அனுப்பும்.
முழுவளர்ச்சியற்ற கைகளுடன் பிறந்த பார்க் வியூ தொடக்கப்பள்ளி மாணவர் இயன் சான் யீ அன், 12 , பென்சிலைப் பிடித்து எழுதுவதற்கு கே கே மகளிர், சிறார் மருத்துவமனையில் தமது ஐந்தாவது வயதில் பயிற்சி பெற வேண்டியிருந்தது.
ஆயினும், பள்ளிக் கல்வியில் முழுமையை எட்ட விரும்பி, வேட்கையுடன் புதியத் திறன்களைக் கற்பதில் இயன் ஈடுபட்டார். தரைப்பந்துப் போட்டிகளில் தொடக்கநிலை ஐந்து மற்றும் ஆறாம் வகுப்பில் பங்கேற்ற இயன், கித்தார் இசைக்கருவி கற்று ஆசிரியர் தின நிகழ்ச்சி ஒன்றுக்காக இசைக்குழுவில் வாசித்தார். கணக்குப் பாடத்தை அதிகம் விரும்பும் இயன், அதில் அடைவுநிலை-2 தேர்ச்சி பெற்றதில் மகிழ்வதாகக் கூறினார்.