செலாராங் பார்க் சமூக மேற்பார்வை நிலையத்தில் வேலைக்கு வெளியே சென்று திரும்பும் திட்டத்தின் கீழ் வைக்கப்பட்டிருந்த 36 வயது கைதி ஒருவர் நிலையத்துக்குத் திரும்பாமல் தப்பித்து விட்டார். தப்பியோடிய அவர் மேலும் சில குற்றச்செயல்களில் ஈடுபட்டார்.
முகம்மது நூர் இன்ட்ரா ஹம்சா எனும் அந்தக் கைதி, 2022 ஆகஸ்ட் 13ஆம் தேதியிலிருந்து நவம்பர் 27ஆம் தேதி வரை மூன்று மாதங்களுக்குத் தலைமறைவாக இருந்தார். அவர் அந்த நிலையத்திலேயே இருந்திருந்தால் 2023, ஜனவரி 27ஆம் தேதி விடுதலையாகி இருப்பார்.
தலைமறைவாக இருந்த சமயத்தில் நூர் ஒரு காரைத் திருடி, அதை வாகனமோட்டும் உரிமம் இல்லாமல் ஓட்டியிருக்கிறார். மேலும் போதைப் பொருள் உட்கொண்டிருந்ததால் அவர் அந்த காரை மூவர் மீது மோதி அவர்களைக் காயத்துக்குள்ளாக்கி இருக்கிறார்.
நிலையத்திலிருந்து தப்பித்துச் சென்ற அவர், படிக்கட்டுகள் போன்ற பொது இடங்களில் தூங்கினார்.
நவம்பர் 24ஆம் தேதியன்று, நூர் மீது சுமத்தப்பட்ட 13 குற்றச்சாட்டுகள் நிரூபணமாயின. வாகனத்தை ஆபத்தான முறையில் செலுத்தியது, குடிநுழைவு அதிகாரி கூறிய வழிகாட்டிகளைப் பின்பற்றாதது, குற்றவியல் மிரட்டல் போன்றவை அவற்றுள் அடங்கும்.
டிசம்பர் 12ஆம் தேதி இடம்பெறும் அவரது தண்டனை விதிப்பின்போது மேலும் 10 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்படும்.
2022, நவம்பர் 13ஆம் தேதி உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் வரிசையில் காரில் காத்திருந்தபோது, அங்குள்ள அதிகாரி ஒருவர் அவரது காரைப் பரிசோதிப்பதற்காக அதற்குரிய இடத்துக்குப் போகச் சொன்னார். தம்மைப் பற்றி உண்மைகள் வெளியே தெரிந்துவிடும் என்ற அச்சத்தில் அவர் காரை வளைத்து அங்கிருந்து எதிர்திசையில் காரை ஓட்டி தப்பித்துச் சென்றார்.
மேலும், தமக்காக ஒரு காரை வாடகைக்கு எடுக்க மற்றொருவரிடம் கேட்டுக்கொண்ட நூர், அதை பொங்கோல் பகுதியில் ஓட்டிச் சென்றபோது, அந்தக் காரை வாடகைக்கு விட்ட நிறுவனத்தின் அதிகாரி அதைப் பார்த்து விட்டார்.
காரை வாடகைக்கு எடுத்தவர் மற்றொருவர் என்று அறிந்த அந்த நிறுவன அதிகாரி நூரைப் பின்தொடர்ந்து, காரை இடைமறித்தார். மாட்டிக்கொண்டு விடுவோம் என்ற அச்சத்தில் நூர் அதிகாரியின் காரின் மீது மோதினார். மேலும் தனக்கு பிரச்சினை கொடுத்தால், அவரைக் கத்தியால் வெட்டிவிடுவேன் என்று பயமுறுத்தினார்.
இதுபோன்ற பல்வேறு குற்றச் செயல்களில் 2022, நவம்பர் 27ஆம் தேதி நூர் கைதாவதற்கு முன்னதாக ஈடுபட்டார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.