தெம்பனிசில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்கில் படிக்கட்டுக் கைப்பிடியில் சுற்றியிருந்த நிலையில் திங்கட்கிழமை காணப்பட்ட மலைப்பாம்பு ஒன்று காட்டுப்பகுதிக்குள் விடப்பட்டது.
புளோக் 428 தெம்பனிஸ் ஸ்திரீட் 41ல் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட அந்த மலைப்பாம்பு, தேசிய பூங்காக் கழகத்தின் வனவிலங்கு மறுவாழ்வு நிலையத்திடம் ஒப்படைக்கப்பட்டதாக நகராண்மை சேவை அலுவலகமும் கழகமும் புதன்கிழமை தெரிவித்தன.
அங்கு கால்நடை மருத்துவர்கள் மலைப்பாம்பைப் பரிசோதித்தனர்.
ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சின் கேள்விகளுக்குப் பதிலளித்த மேற்கண்ட இரு அமைப்புகளும், “மலைப்பாம்பு ஆரோக்கியமாக இருப்பதாக மதிப்பிடப்பட்டது. பின்னர் காட்டுப்பகுதிக்குள் அது விடப்பட்டது,” என்று குறிப்பிட்டன.
“சிங்கப்பூருக்கே உரிய இந்த வகை மலைப்பாம்பு, நகர்ப்புறப் பகுதிகளில் அவ்வப்போது காணப்படுவதுண்டு. எலிகள், பூச்சிகள் போன்றவற்றின் எண்ணிக்கையைக் குறைவாக வைத்திருப்பதில் மலைப்பாம்புகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன,” என்று அறிக்கை குறிப்பிட்டது.
ஏறக்குறைய 3 மீட்டர் நீளமுடைய மலைப்பாம்பு, தெம்பனிஸ் புளோக்கில் வசிக்கும் குடியிருப்பாளர்களைப் பயமுறுத்தியது. அந்த புளோக்கின் மூன்றாம், நான்காம் தளத்திற்கு இடைப்பட்ட படிக்கட்டில் அந்த மலைப்பாம்பு அசைவின்றிக் காணப்பட்டதாக சீன நாளிதழான ஷின் மின் திங்கட்கிழமை தெரிவித்தது.
அந்த மலைப்பாம்பு புளோக்கிற்கு எப்படிச் சென்றது என்பது பற்றித் தெரியவில்லை. அந்த புளோக்கிற்குப் பக்கத்தில் தெம்பனிஸ் ‘எக்கோ கிரீன்’ பூங்கா உள்ளது.