தமிழ்நாடு: சிறுமுகை அருகில், மேட்டுப்பாளையம் திம்மராயம்பாளையத்தில் மனைவி நெபிஷா, மகள் பாத்திமா ஆகியோருடன் வாழ்பவர் காஜாமைதீன் 43. பள்ளிவாசலில் பணிபுரியும் இவர் பகுதிநேரமாக பாம்புகளை பிடிக்கும் தொழில் செய்துவந்தார்.
நூற்றுக்கும்மேற்பட்ட பாம்புகளைக் கவனமாகப் பிடித்து அவர் காட்டில் விட்டுவிடுவார். அதனால் ஊர்மக்கள் அவரைப் பாம்புப்பிடி மன்னன் என்று பெருமதிப்புடன் அழைத்துவந்தனர்.
சில நாட்களுக்கு முன் சிறுமுகை அன்னூர் சாலையில் நாகப்பாம்பு வாகனத்தில் உள்ளதை அறிந்த தீயணைப்புப் படையினர் காஜாவை அழைத்துள்ளனர். காஜா உடனே அங்கு சென்று நாகத்தைப் பிடித்துள்ளார். அப்போதே நாகம் அவரைத் தீண்டிவிட்டது. அதைப் பொருட்படுத்தாது, காஜா அதனை காட்டுக்கு எடுத்துச்சென்றுள்ளார். அங்கு அதனை விடும்போது, மீண்டும் நாகம் அவரைக் கடித்துவிட்டுச் சென்றது. வலியால் வேதனைப்பட்ட காஜா மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு தீவிர சிகிச்சையில் உள்ளார். அவருக்கு உயர்தர சிகிச்சையும் நிவாரண உதவியும் வழங்க தமிழக அரசை சமூக ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.