கொவிட்-19 கிருமித்தொற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்திருப்பதால், மருத்துவமனைகளில் மீண்டும் முன்னைய அழுத்தம் ஏற்பட்டுள்ளது.
இவ்விவரத்தை அறிவித்த சுகாதார அமைச்சு, முன்னைய கொவிட்-19 பெருந்தொற்றுக் காலத்தைப் போல மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிக உயர்வாக இல்லை என்றாலும் காற்றில் உள்ள உருமாறிவரும் கிருமிகளால்தான் இந்நிலைமை என்றும் உறுதியாகக் கூறமுடியாது என்றும் தெரிவித்தது.
டிசம்பர் 2ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் கொவிட்-19 கிருமித்தொற்றால் 32,035 பேர் பாதிக்கப்பட்டனர். அது 2023ல் பதிவான ஆக அதிகமான கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள்.
இதற்கு முந்தைய சாதனை எண்ணிக்கையான 28,410 பேர் பாதிக்கப்பட்டது மார்ச் மாதத்தின் ஒரு வாரத்தில் நிகழ்ந்தது.
ஆகக் கடைசி எண்ணிக்கை முன்னைய வாரத்தின் தொற்று எண்ணிக்கையான 22,094ஐ காட்டிலும் கிட்டத்தட்ட 10,000க்கு மேற்பட்டது.
கடந்த இரண்டு, மூன்று மாதங்களில் வாரந்தர கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்கள் சுமார் 15,000 ஆக இருந்தன.
மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் தீவிர சிகிச்சை தேவைப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.
கொவிட்-19 கிருமித்தொற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவோரின் அன்றாட எண்ணிக்கை சராசரியாக முன்னைய வார அளவான 136லிருந்து கடந்த வாரத்தில் 225 ஆக உயர்ந்தது என்று சுகாதார அமைச்சு டிசம்பர் 8ஆம் தேதி வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது.
ஒப்புநோக்க, தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்படும் சம்பவம் முன்னைய வாரத்தில் ஒன்றாக இருந்தது. அது கடந்த வாரத்தில் நான்காக உயர்ந்தது என்றும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
“இது ஏற்கெனவே பணிச் சுமை அதிகமான நமது மருத்துவமனைகளின் சுமையை மேலும் அதிகமாக்கியுள்ளது,” என்றும் அறிக்கை கூறுகிறது.
நவம்பர் 26க்கும் டிசம்பர் 2ஆம் தேதிக்கும் இடைப்பட்ட வாரத்தில் கொவிட்-19 கிருமித்தொற்றால் ஒன்பது பேர் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். இது முன்னைய வாரத்தைக் காட்டிலும் நான்கு பேர் அதிகம்.
இந்த நிலைமை வரும் வாரங்களில் மேலும் மோசமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2023 மார்ச்சுக்கும் ஏப்ரலுக்கும் இடைப்பட்ட காலத்தில் கொவிட்-19 அலை ஏற்பட்ட மூன்று வாரங்களுக்குப் பிறகு கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16ஐத் தொட்டது.
இதன் காரணத்தால் கொவிட்-19 கிருமித்தொற்றால் மரணமுற்றோர் எண்ணிக்கை ஏப்ரல் மாதத்தில் 54 ஆகவும் மார்ச் மாதத்தில் 53 ஆகவும் இருந்தது.
கிருமித்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு மக்களின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதையும் ஆண்டிறுதி பயணக் காலம், விழாக்காலத்தில் வெளிநாடுகளுக்குப் பயணம் செல்வோர் அதிகரிப்பு, சமூக கலந்துறவாடல்கள் அதிகரிப்பு ஆகியவை காரணங்களாக இருக்கலாம் என்றும் சுகாதார அமைச்சு சுட்டியது.
“மக்கள் குறிப்பாக மருத்துவ பிரச்சினைகள் உள்ள முதியவர்கள் கொவிட்-19 தடுப்பூசிகளைக் காலத்துடன் போட்டுக்கொள்ள வலியுறுத்தப்படுகிறார்கள். உடல்நிலை சரியில்லை என்றால், அவர்கள் சமூக பொறுப்புணர்வுடன் வீட்டிலேயே இருக்க வேண்டும். மேலும் கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் முகக் கவசம் அணிந்து செல்ல வேண்டும்.
“கடுமையான, உயிருக்கு ஆபத்தான நிலைமைகளில் மட்டும் மருத்துவமனையின் அவசரகாலப் பிரிவை நாட வேண்டும். இது உடனடி அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு முன்னுரிமை அளிக்க ஏதுவாக இருக்கும்,” என்றும் சுகாதார அமைச்சு தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.