திருவாட்டி கோ ஷெர் ஜிங், 14 வயதுச் சிறுமியாக இருந்தபோது அவரது தாயாருக்கு மூளைப் புற்றுநோய் என்று கண்டறியப்பட்டது. திருவாட்டி கோவிற்கு 19 வயதானபோது, அவரது தாயார் மரணமடைந்தார். தாயார் நோய்வாய்ப்பட்டபோது பராமரித்ததும், பிறகு மரணமடைந்ததும் திருவாட்டி கோவுக்கு மனத்தளவில் பெரும்பாரத்தை ஏற்படுத்தி அதனால் உயிரை மாய்த்துக்கொள்ள முயற்சி செய்ததாகவும் அவர் கூறுகிறார்.
சில்லறை விற்பனைக் கடையில் தற்போது பணியாற்றும் திருவாட்டி கோவுக்கு 26 வயதாகிவிட்டது. தூக்கமின்மையும் சோர்வும் அவரைப் பல ஆண்டுகளாக வாட்டின. ஒரு நண்பரின் அறிவுரையால் அவர் பொது மருத்துவரின் உதவியை நாடினார்.
புக்கிட் பாஞ்சாங்கில் செயல்படும் பொது மருந்தகமான கேஷியு மெடிகல் அன்ட் சர்ஜரியில் டாக்டர் யாப் சியோங் இயு, திருவாட்டி கோவைப் பரிசோதித்து, அவர் மனச்சோர்வினால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை தெரிவித்தார்.
மருந்துகளுடன், அன்றாட மனநிலையை குறிப்பெடுக்க ஒரு குறிப்பேடும் கோவுக்கு வழங்கப்பட்டது. அவருக்குள் ஏற்படக்கூடிய எதிர்மறை எண்ணங்களை வெளியேற்றிவிடும்படி மருத்துவர் அறிவுறுத்தினார்.
அன்றுவரை, மனநலக் கழகம் (ஐஎம்எச்) அல்லது அதிக கட்டணங்களை வசூலிக்கும் தனியார் மனநல மருத்துவர்களிடம் மட்டும்தான் இதுபோன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும் என்ற எண்ணம் திருவாட்டி கோவுக்கு இருந்தது.
அவரைப்போல பல மனநல நோயாளிகள், தங்கள் வீடுகளுக்கு அருகே உள்ள பொது மருந்தகங்களிலும் அடிப்படை பராமரிப்பு உதவி கிடைக்கும் என்பதை அறிந்துவருகின்றனர்.
ஒருங்கிணைந்த பராமரிப்பு அமைப்பின் தகவல்படி, சுமார் 420 பொது மருத்துவர்கள், ஒருங்கிணைந்த தேசிய மனநல பராமரிப்புத் திட்டத்தில் சேர்ந்துள்ளனர். மனநல நோயால் பாதிக்கப்பட்டுள்ளோருக்கு உதவும் நோக்குடன் கடந்த 2012 முதல் இந்த அமைப்பு நிறுவப்பட்டது. இதுவரை 3,700 நோயாளிகள், மனநலக் கழகத்தால் பரிந்துரைக்கப்பட்டு, பொது மருத்துவர்களிடம் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சமூக சுகாதார உதவித் திட்டம் (சாஸ்) வழங்கும் நிதியுதவிகளை அனைத்து சிங்கப்பூரர்களும் பயன்டுத்தி சிங்கப்பூரில் உள்ள 17 பலதுறை மருந்தகங்களில் மனநல சிகிச்சை பெறலாம்.