டிசம்பர் மாதத்திலிருந்து, மத்திய, ஈசூன் வட்டாரங்களில் வழிகளைத் தேடும் திட்டத்தின் அங்கமாக, நிலப் போக்குவரத்து ஆணையம், அறிவிப்புப் பலகைகளைக் கொண்டு சோதனை நடத்திவருகிறது.
பாதசாரிகளும் சைக்கிளோட்டிகளும்,வழித் தடத்தை எளிதாக அடையாளம் கண்டுகொள்ளும் விதமாக நகரின் மத்தியப் பகுதியில் புதிய அறிவிப்புப் பலகைகள் எழுப்பப்பட்டுள்ளன.
இத்திட்டத்தின் ஒரு அங்கமாக நிலப் போக்குவரத்து ஆணையம் (எல்டிஏ) நகரின் மத்தியப் பகுதியிலும் ஈசூன் வட்டாரத்திலும் டிசம்பர் மாதத்திலிருந்து 6 முதல் 9 மாதங்களுக்கு சோதனைகள் மேற்கொண்டுள்ளது.
அறிவிப்புப் பலகைகள் 3 விதமாக அமைந்துள்ளன. முழு வட்டாரத்தையும் காட்டும் வரைபடத்துடன் அங்குள்ள வசதிகளையும் பொழுதுபோக்கு நடவடிக்கைக்கான தளங்கள் பற்றிய விவரங்களை உள்ளடக்கி பெரிய உயரமான அறிவிப்புப் பலகைகள் இருக்கும். நடுத்தர அளவிலான அறிவிப்புப் பலகைகளில் சிறிய அளவிலான வரைபடமும் முக்கிய குறிப்புகளும் இருக்கும். மக்கள் சரியான பாதையில் இருக்கின்றனரா என்பதை சுட்டும் சிறிய அறிவிப்புப் பலகைகள் மூன்றாம் வகைப்படும்.
ஏற்கெனவே இருக்கும் வழிகாட்டி குறியீடுகளும் பலகைகளும் வழங்கும் விவரங்களைப் பயன்பாட்டு ரீதியில் மேம்படுத்தும் நோக்கத்துடன் புதிய அறிவிப்புப் பலகைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன என்று ஆணையம் ஊடகங்களுக்கு அளித்த முன்னோடி விளக்கவுரையில் தெரிவித்தது.
வண்ணங்களை சரிவர பார்க்க முடியதோருக்கு தொட்டு உணர்ந்து கொள்ள உதவிடும் வகையில் அறிவிப்புப் பலகைகளில் பசுமைப் பகுதிகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும். சக்கர நாற்காலி பயன்படுத்துவோரும் பார்க்க அவை ஏதுவாக இருக்கும்.
5 நிமிட சுற்றளவில் செல்லக்கூடிய இடங்கள், முப்பரிமாண வடிவங்களில் முக்கிய நினைவுச் சின்னங்கள், பொது போக்குவரத்து நிற்கும் இடங்கள், சைக்கிள் ஓட்டும் பாதைகள் என பல விவரங்கள் அறிவிப்புப் பலகைகளில் உள்ளடங்கும். உள்ளூர் வாசிகளுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கும் இது பெரிதும் உதவும்.
மத்தியப் பகுதியில் யுஓபி பிளாசா, ஓசிபிசி சென்டர் ஈஸ்ட், ஃபார்ஈஸ்ட் ஸ்குவேர், தெலுக் ஆயர் எம்ஆர்டி ஆகிய 4 இடங்களில் புதிய அறிவிப்புப் பலகைகள் அமைந்துள்ளன. அடுத்த ஆண்டு மத்தியில் தஞ்சோங் பகார், சைனாடவுன் எம்ஆர்டி நிலையங்களின் அருகில் மீதம் உள்ள 16 அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படும்.
அதே காலகட்டத்தில் எம்ஆர்டி நிலையம் உட்பட்ட ஈசூன் வட்டாரத்தில் 15 அறிவிப்புப் பலகைகள் வைக்கப்படும்.