வியட்னாமிலிருந்து சிங்கப்பூருக்கு வந்த ஸ்கூட் விமானத்தில் பயணம் செய்த மூவரிடமிருந்து S$31,000 திருடிய சந்தேகத்தின் பேரில் ஆடவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஸாங் சியுசியாங் எனும் அந்த 52 வயது சீன நாட்டவர் மீது திங்கட்கிழமை (டிசம்பர் 18) மாவட்ட நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.
ஸ்கூட் TR305 விமானச் சேவையில் டிசம்பர் 16ஆம் தேதி காலை 9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை மூவரிடமிருந்து ஸாங் பணத்தைத் திருடியதாக குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த விமானம் வியட்னாமின் ஹோ சிமின்னிலிருந்து சாங்கி விமான நிலையத்தை நோக்கி வந்துகொண்டிருந்தது.
டான் சின் குவாங் எனும் பயணியின் கறுப்பு நிறத் தோல்பையிலிருந்து $50யையும் 510 மில்லியன் வியட்னாமிய டோங் நாணயத்தையும் (S$28,000) திருடியதாக நம்பப்படுகிறது.
பின்னர் பார்க் சாங்கு எனும் பயணியின் சாம்பல் நிலப் பையிலிருந்த கடித உறையில் வைக்கப்பட்டிருந்த US$1,000யையும் S$930யையும் , ஜேனஸ் லிம் எனும் பயணியின் தோல்பையிலிருந்து S$600யையும் 3 மில்லியன் வியட்னாமிய நாணயத்தையும் திருடியதாகவும் நம்பப்படுகிறது.
ஸாங் விசாரணைக்காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்றும் டிசம்பர் 22ஆம் தேதி அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாவார் என்றும் தெரிவிக்கப்பட்டது.
ஸாங்கின் திருட்டுக் குற்றும் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனையோ அபராதமோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.