ஈசூன் வட்டாரத்தில் சிங்கப்பூர் சுங்கத் துறை அதிகாரிகள் நடத்திய வேட்டையில் இறக்குமதி தீர்வை செலுத்தப்படாத 2,900 பெட்டிகளில் இருந்த சிகரெட்டுகள் பிடிபட்டன.
கள்ளத்தனமாக அந்த சிகரெட்டுகளைக் கொண்டு வந்ததன் மூலம் ஏமாற்றப்பட்ட பொருள் சேவை வரியின் (ஜிஎஸ்டி) மதிப்பு $342,134.
ஈசூன் அவென்யூ 5ல் உள்ள கார்ப்பேட்டையில் கடந்த புதன்கிழமை (டிசம்பர் 20) ஆடவர் ஒருவர் வேன் ஒன்றின் கதவைத் திறந்தபோது அதனுள் தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகள் இருப்பதை அதிகாரிகள் கண்டனர்.
பெட்டிகளில் அடைக்கப்பட்ட அந்த சிகரெட்டுகள் வேனின் சரக்குப் பாதுகாப்புப் பகுதியில் இருந்தன.
அடையாளம் தெரியாத ஒருவர் கள்ள சிகரெட்டுகளை விநியோக்கும் பணியில் ஆடவரை ஈடுபடுத்தியது விசாரணையில் தெரிய வந்தது. 31 வயதான அந்த சிங்கப்பூர் ஆடவர் கைது செய்யப்பட்டதாக சிங்கப்பூர் சுங்கத் துறை தெரிவித்துள்ளது.
தீர்வை செலுத்தப்படாத சிகரெட்டுகளை வாங்க, விற்க, சேமித்து வைக்க மற்றும் விநியோகிக்க சட்டம் அனுமதிக்கவில்லை. சட்டத்தை மீறுவோருக்கு, ஏமாற்றப்பட்ட ஜிஎஸ்டி தொகையைக் காட்டிலும் 40 மடங்கு அபராதமாக விதிக்கப்படும். அத்துடன், ஆறு ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் அவர்களுக்கு விதிக்க சட்டத்தில் இடமுண்டு.