சிங்கப்பூர் விமானக் கண்காட்சி மீண்டும் பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படுகிறது. இந்தக் கண்காட்சி இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 20ஆம் தேதிக்கும் 25ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் ஒன்பதாவது சிங்கப்பூர் விமானக் கண்காட்சி நடைபெறுகிறது.
2018ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 70,000 பேர் கண்காட்சியை நேரில் கண்டு மகிழ்ந்தனர். கொவிட்-19 நெருக்கடிநிலை காரணமாக 2020ஆம் ஆண்டில் கண்காட்சியை நேரில் கண்ட பொதுமக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 20,000க்குக் குறைந்தது.
2022ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகமாகக் குறைக்கப்பட்டது. பொதுமக்கள் கலந்துகொள்ளும் நாள்கள் நீக்கப்பட்டன.
விமானக் கண்காட்சியை நேரில் காண விரும்பும் பொதுமக்கள் பிப்ரவரி 24, 25ஆம் தேதிகளில் சாங்கி கண்காட்சி நிலையங்களுக்குச் செல்லலாம். பொதுமக்களுக்கான நுழைவுச்சீட்டுகள் ஜனவரி 2ஆம் தேதியிலிருந்து விற்கப்படும்.
பெரியவர்களுக்கான நுழைவுச்சீட்டுகளின் விலை $34. 3 வயதுக்கும் 12 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களுக்கான நுழைவுச்சீட்டுகளின் விலை $17. நான்கு நுழைவுச்சீட்டுகளும் வாகன நிறுத்துமிடம் அனுமதி சீட்டும் அடங்கிய குழுத் தொகுப்பு $240க்கும் விற்கப்படுகிறது.
அடுத்த ஆண்டு நடைபெறும் சிங்கப்பூர் விமானக் கண்காட்சியை எஸ்பிரியா இவென்ட்ஸ் நிறுவனம் நடத்துகிறது.
பொதுமக்களுக்கான இரண்டு நாள்கள் குறித்து கூடுதல் விவரங்கள் அடுத்த ஆண்டு அறிவிக்கப்படும் என்று அது கூறியது.
அந்த இரண்டு நாள்களிலும் 60,0000க்கும் அதிகமான பொதுமக்கள் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கண்காட்சியின் முதல் நான்கு நாள்கள் பொதுவாக வர்த்தக ரீதியான வருகையாளர்களுக்கு ஒதுக்கப்படும். அதனைத் தொடர்ந்து, இரண்டு நாள்கள் விமானக் கண்காட்சி பொதுமக்களுக்குத் திறந்துவிடப்படும்.
கொவிட்-19 நெருக்கடிநிலையின்போது வர்த்தக ரீதியான வருகையாளர்களின் எண்ணிக்கை குறைந்தது. இம்முறை அது வழக்கநிலைக்குத் திரும்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
50 நாடுகளிலிருந்து 1,000க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கண்காட்சியில் கலந்துகொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிசம்பர் 8ஆம் தேதி நிலவரப்படி 390 நிறுவனங்கள் கண்காட்சியில் கலந்துகொள்ளும் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது.