‘டீப்ஃபேக்’ எனப்படும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் போலிச் செய்திகளில், அவை போலி என்று மங்கலான எழுத்துகளால் (வாட்டர்மார்க்) குறிக்கப்படலாம்.
வருங்காலத்தில் அதற்கான சாத்தியம் உள்ளது. அதேபோல, நம்பத்தகுந்த அம்சங்களைக் குறிக்கவும் அந்த ‘வாட்டர்மார்க்’ தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்.
‘டீப்ஃபேக்’ தொழில்நுட்பத்திலான புதிய வகை ஆள்மாறாட்ட மோசடி மற்றும் பொய்த் தகவல்கள் பெருகிவரும் சூழ்நிலையில் அவற்றை முறியடிப்பதற்கான முயற்சிகளில் சிங்கப்பூர் ஈடுபட்டு வருகிறது.
அதன் தொடர்ச்சியாக, போலிகளை அடையாளம் காண்பதற்கான பல வழிவகைகளில் ‘வாட்டர்மார்க்’ தொழில்நுட்பமும் ஒன்று.
போலிகளை அடையாளம் காட்டி, இணைய நம்பிக்கை மற்றும் பாதுகாப்பை ஏற்படுத்த $20 மில்லியன் செலவிலான புதிய திட்டம் ஒன்று வகுக்கப்பட்டுள்ளது.
அதற்கான தொழில்நுட்பங்கள் இந்தத் திட்டத்தின்கீழ் வடிவமைக்கப்படும்.
இதனை புதன்கிழமை (ஜனவரி 10) நாடாளுமன்றத்தில் அறிவித்த தொடர்பு, தகவல் அமைச்சர் ஜோசஃபின் டியோ, மோசடிக்காரர்களிடம் இருந்தும் இணைய அபாயங்களில் இருந்தும் தற்காக்க புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டிய அவசியம் சிங்கப்பூருக்கு ஏற்பட்டு இருப்பதாகக் குறிப்பிட்டார்.
“நமது மின்னிலக்கப் பயணம் புதிய அபாயங்களை வழிகாட்டி உள்ளது. இணையத் தாக்குதல்கள், மோசடிகள், தீங்கு விளைவிக்கும் தகவல்கள் போன்றவை நமது பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் அளிக்கின்றன.
“பல உறுப்பினர்கள் இங்கே குறிப்பிட்டதுபோல, சமூகத்தில் உள்ள நம்பிக்கை இதுபோன்ற அச்சுறுத்தல்களால் கீழறுக்கப்படலாம்.
“இந்த அபாயங்களை முறியடிக்க புதிய சட்டங்களை இயற்றுவது போன்ற பல துணிச்சலான நடவடிக்கைகளில் சிங்கப்பூர் அரசாங்கம் ஈடுபட்டாலும் அவசியமானவற்றை இன்னும் தொடர்ந்து செய்ய வேண்டி உள்ளது,” என்று திருவாட்டி டியோ மன்றத்தில் விவரித்தார்.
தொடர்பு, தகவல் அமைச்சுக்கான அரசாங்க நாடாளுமன்றக் குழு சமர்ப்பித்துள்ள மசோதா ஒன்றுக்குப் பதிலளித்து அமைச்சர் பேசினார். அந்தக் குழுவில் உள்ள ஐந்து உறுப்பினர்களோடு இதர ஐந்து உறுப்பினர்களும் இணைந்து மசோதாவைச் சமர்ப்பித்தனர்.
‘அனைத்தையும் உள்ளடக்கிய, பாதுகாப்பான மின்னிலக்க சமூகத்தை உருவாக்குதல்’ என்னும் அந்த மசோதா 13 பரிந்துரைகளைக் கொண்டுள்ளது.