உறவினரான ஏழு வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யத் தொடங்கி அடுத்த நான்கு ஆண்டுகளில் அதிகரித்து, கிட்டத்தட்ட ஒவ்வொரு வார இறுதி நாள்களில் அந்தச் சிறுமியை தொடர்ந்து பாலியல் பலாத்காரம் செய்த ஆடவருக்கு 29½ ஆண்டுகள் சிறையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
தற்போது 13 வயதாகும் அந்தச் சிறுமி அந்த நபருடன் இரவில் படுக்கையைப் பகிர்ந்து கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டது. ஆடவரின் மனைவியும் இரண்டு குழந்தைகளும் மற்றொரு படுக்கையறையில் தூங்கினர்.
அந்த நபரால் சிறுமிக்குப் பாலியல் தொற்றுநோய் ஏற்பட்டது. அது மட்டுமல்லாமல் பாலியல் பலாத்காரத்துக்குப் பிறகு உடல் மெலிந்திருந்தால் அதற்கு எளிதாக இருக்கும் என்று சிறுமியின் உடலைக் குறிப்பிட்டு அவர் அவமானப்படுத்தினார்.
சிறுமியின் பெற்றோர் மணவிலக்கு பெற்று பிரிந்துவிட்டதால் சிறுமியை அவரது தாயார் உறவினரான ஆடவரின் வீட்டில் தங்க வைத்தார்.
காவல்துறை விசாரித்தபோது, சிறுமி தன்னைக் கவர்ந்துவிட்டதாகவும் உடலுறவுக் கொள்வதை சிறுமி ரசித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஜனவரி 11ஆம் தேதியன்று தற்போது 47 வயதாகும் அந்த நபருக்கு 29½ ஆண்டுகள் சிறைத்தண்டனையும் 24 பிரம்படிகளும் விதிக்கப்பட்டன.
2017க்கும் 2021க்கும் இடையே மோசமான பாலியல் பலாத்காரம் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகளை அந்த நபர் ஒப்புக்கொண்டார். பாதிக்கப்பட்டவரின் அடையாளத்தைப் பாதுகாக்கும் பொருட்டு நபரின் பெயர் வெளியிடப்படவில்லை.
அவருக்கு தண்டனை விதிக்கப்படும்போது மேலும் 15 பாலியல் குற்றச்சாட்டுகளை நீதிபதி கவனத்தில் எடுத்துக் கொண்டார்.
தீர்ப்பில் பேசிய நீதிபதி எஸ். மோகன், “குற்றம் சாட்டப்பட்டவர் தனது உறவினரைக் கவனித்துப் பாதுகாப்பதற்குப் பதிலாக அவரது அருவருப்பான மற்றும் மோசமான காமத்துக்கு சிறுமியைப் பாலியல் பொம்மையாக மாற்றிவிட்டார்,” என்றார்.
சிறுமி தற்போது சமூகநல விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரது மன உளைச்சலுக்கு ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
மூன்று ஆண்டுகளுக்கு மேல் தொடர்ந்த பாலியல் வன்கொடுமையால் சிறுமிக்கு தன்னை மாய்த்துக் கொள்ளும் எண்ணம் ஏற்பட்டதாக நீதிமன்றத்தில் பேசிய அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.
2021ல் தான் கர்ப்பமாகிவிடுவோம் என்ற அச்சத்தில் பள்ளியில் இருந்த தோழிகளிடம் தனது பிரச்சினைகளை சிறுமி தெரிவித்துள்ளார். பின்னர் பள்ளி ஆலோசகர்களிடம் இந்த விவகாரம் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பள்ளி நிர்வாகம் காவல்துறைக்குத் தகவல் அளித்தது. இதையடுத்து 2021 அக்டோபரில் ஆடவரை காவல்துறையினர் கைது செய்தனர்.