ஒரே பரிவர்த்தனையில் $80 சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தி என்டியுசி ஃபேர்பிரைஸ் பேரங்காடிகளில் பொருள்கள் வாங்குவோருக்கு $8 பற்றுச்சீட்டு வழங்கப்படும் என்று ஃபேர்பிரைஸ் குழுமம் அண்மையில் அறிவித்திருந்தது.
இந்நிலையில், இத்திட்டம் ஜனவரி 24ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும் என்று அது கூறியது.
மேலும் பல வாடிக்கையாளர்கள் தங்கள் அன்றாடச் செலவினத்தைக் குறைத்துக்கொள்ள உதவும் வகையில் இத்திட்டம் இன்னும் ஒரு வாரத்துக்கு நீட்டிக்கப்படுவதாக ஜனவரி 17ஆம் தேதியன்று ஃபேர்பிரைஸ் குழுமம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு வாரங்களில் $8 பற்றுச்சீட்டுகளுக்காக வாடிக்கையாளர்கள் பலர் திரண்டதாக ஃபேர்பிரைஸ் குழுமத்தின் தலைமை நிர்வாகி விப்புல் சாவ்லா தெரிவித்தார்.
பற்றசீட்டுகள் வழங்கப்பட்டு ஒரு நாள் கழித்து அவற்றைப் பயன்படுத்தலாம். அவற்றை பிப்ரவரி 29 வரை பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
குறைந்தபட்ச தொகையுள்ள பரிவர்த்தனைகளுக்கு மட்டுமே பற்றுச்சீட்டுகளைப் பயன்படுத்தலாம் என்ற விதிமுறை இல்லை.
அத்துடன் ஒரே பரிவரத்தனைக்கு எவ்வளவு பற்றுச்சீட்டுகள் வேண்டுமென்றாலும் பயன்படுத்தலாம்.