தேசியக் கலை மன்றம், சிங்கப்பூர் பயணத்துறைக் கழகத்தின் ஆதரவுடன் நடத்தும் இவ்வாண்டின் சிங்கப்பூர் கலை வாரம் ஜனவரி 19 முதல் ஜனவரி 28 வரை நடைபெற உள்ளது.
தொழில்நுட்பமும் படைப்பாற்றலும் ஒன்றிணையும் வகையில் 150க்கும் மேற்பட்ட கலைப்படைப்புகளை 400க்கும் மேற்பட்ட உள்ளூர், வெளிநாட்டுக் கலைஞர்களும் நிறுவனங்களும் காட்சிப்படுத்துகின்றனர்.
சிங்கப்பூர் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கலைச் சூழலை எடுத்துக்காட்டும் வகையிலும், கலாசாரம், வரலாறு, சமூக அடையாளம் எனப் பல கூறுகளை வெளிப்படுத்தும் கலைப் படைப்புகள் பார்வைக்கு வைக்கப்படவுள்ளன.
பிரபல கலைக் கல்வி நிலையங்கள், தனியார்க் கலை அமைப்புகள், வணிகக் கலைக்கூடங்கள் என அனைவரையும் இணைக்கும் இந்த முன்னெடுப்பிற்கு, மக்கள் கழகமும் ‘ஹூண்டாய் மோட்டார்ஸ்’ நிறுவனமும் பங்களிக்கின்றன.
தீவெங்கும் பல்வேறு பகுதிகளில், வெவ்வேறு நாள்களில் பல கலைப் படைப்புகள் காட்சிப்படுத்தப்படவுள்ளன. சிங்கப்பூர் கலை வாரத்தில் தொடங்கப்பட்டு, நீண்ட நாள்கள் இடம்பெற இருக்கும் பல படைப்புகளைக் காண அனுமதி இலவசம்.
மனித அடையாளம் பற்றிய ஆழமான பகுப்பாய்வின் முடிவைக் கொண்டு, உருவாக்க செயற்கை நுண்ணறிவின் துணையோடு செய்யப்பட்ட படைப்புகள் உள்ளன.
தாய்மை, தலைமைத்துவம், அதிகாரம் என பல மன உணர்வுகளை வெளிப்படுத்தும் படைப்புகள், மனித மரபணுக்களின் நினைவுகளில் பதினையாயிரம் ஆண்டுகளாகப் பதிந்திருக்கும் சொற்களுக்கு அமில மொழியில் வடிவம் கொடுக்கும் ‘என்எஃப்டி’ எனும் தனித்துவமான கலைப் படைப்புகளைப் பொதுமக்கள் பார்வையிடலாம்.
‘கேலிகிராஃபி’ எனும் அழகெழுத்தியல் கலைக்கு தொழில்நுட்பம் மூலம் மறுவடிவம் கொடுக்கும் படைப்பு என காண்போரை வியப்பில் ஆழ்த்தும் பல படைப்புகள் காட்சிக்கு வைக்கப்படுகின்றன.
பல கலைஞர்களுடன் இணைந்து, எம்ஆர்டி நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களை வண்ணமயமாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் தேசியக் கலை மன்றம், இவ்வாண்டு கலை வாரத்தின் ஒரு பகுதியாக பல விவாதங்கள், பயிலரங்குகள், உரையாடல்கள் மற்றும் கலைத் திருவிழாக்களையும் நடத்தவுள்ளது.