இந்தோனீசியாவின் சுமத்ரா பகுதித் தேயிலைத் தோட்ட வரலாற்றுக்கு ஒலி வடிவம் தந்து ஒரு புதிய கலைப்படைப்பைக் காட்சிப்படுத்தியிருக்கிறார் ப்ரியகீதா தியா.
கொவிட் தொற்றுக்காலம் தொட்டே, தென்கிழக்கு ஆசியாவின் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வரலாற்றைப் படித்து வரும் இவர், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அதற்குக் கலைவடிவம் தர எண்ணினார்.
லாசால் கல்லூரியின் கவின்கலைப் பிரிவில் பயின்ற 32 வயது ப்ரியகீதா, ஜாலான் ராஜாவில் இருக்கும் வீவக புளோக் ஒன்றின் 20வது மாடி படிக்கட்டுகளைத் தங்கமுலாம் பூசப்பட்ட தாள்களை ஒட்டிப் படைத்த கலை வடிவமைப்பின் மூலம் பிரபலமானவர்.
தென்னிந்தியாவில் இருந்து பலர் மலேசியா, இந்தோனீசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பகுதிகளுக்குப் புலம்பெயர்ந்த வரலாறு, தேயிலைத் தோட்ட விவசாயம், பரந்துபட்ட அந்நிலப்பரப்புகளில் இருந்த காலனித்துவ ஆட்சிக் காலகட்டத்தின் கதைகள் உள்ளிட்டவற்றைக் குறித்த மாறுபட்ட கண்ணோட்டத்தை ஊக்குவிக்கும் கலைப்படைப்பை உருவாக்க முடிவெடுத்தார்.
நன்யாங் பல்கலைக்கழகத்தின் பரிமாற்றத் திட்டத்திற்காக, நெதர்லாந்தின் ‘யான் ஃபான் ஐக் அகாடமி’யில் மூன்று மாத காலம் அவர் செய்த ஆராய்ச்சிகள் இந்த எண்ணத்திற்கு வடிவம் கொடுக்கும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தன.
அங்கிருந்த ஆவணக் காப்பகத்தின் வரலாற்றுப் படங்களைச் சேகரித்து, அவற்றில் எட்டு படங்களையும் சில வரலாற்று உரைகளையும் தேர்ந்தெடுத்துக் காட்சியமைப்பிலிருந்து ஒலி வடிவத்திற்கு மறுவடிவம் தந்திருக்கிறார் ப்ரியகீதா.
இந்தப் படைப்பு தற்பொழுது நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் சிங்கப்பூர் சமகாலக் கலை நிலையத்தின் புளோக் 38ல் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
‘சாப் சோனிக்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த 14 நிமிட ஒலிப்படைப்பு, தேயிலைத் தோட்டப் பணியாளர்களின் இன்னும் சொல்லப்படாத அனுபவங்களை ஆராய ஒரு செவிவழி நுழைவாயிலாகச் செயல்படுகிறது என்கிறார் ப்ரியகீதா.
“எனது அடையாளத்தைத் தேடவும் அனைவருக்கும் தெரியப்படுத்தவும் உழைத்துக்கொண்டே இருப்பேன்,” எனச் சொல்லும் இவர், எதிர்காலத்தில் கலைத்துறைக்கு வர விரும்புவோர் கலைத்துறையையும் மற்றத் துறைகளைப் போன்ற ஒரு துறையாகக் கருதி தீவிரமாக உழைத்தால் வெற்றிபெறலாம் எனத் தெரிவித்தார்.
இவர் தற்பொழுது தொடர்ந்து காணொளிப் படைப்பு, முப்பரிமாண இயங்குபடம், ஒலி அமைப்பு உள்ளிட்ட பல்வேறு கலை வடிவங்களைப் பயின்று தன்னை மேம்படுத்திக்கொண்டு வருகிறார்.
சிங்கப்பூர் கலை அரும்பொருளகம், ‘ஃபிரைஸ் சோல்’ ‘கொச்சி-முசிரிஸ் பியனாலெ, கேரளா’, ‘லா டிரோப் ஆர்ட் இன்ஸ்டிடியூட், ஆஸ்திரேலியா’ எனப் பல இடங்களில் தனது படைப்புகளைக் காட்சிப்படுத்தியுள்ளார் இவர்.
சமகாலக் கலை நிலையத்தின் கலைஞராகவும் இவர் இருப்பதோடு, ‘சிங்கப்பூர் ஆர்ட் அவுட்ரீச்’ வழங்கும் 2019ஆம் ஆண்டுக்கான ‘இம்பார்ட்’ விருதையும் வென்றுள்ளார்.
தொடர்ந்து இவர் செய்த படைப்புகள் மூலம், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின், இவ்வாண்டுக்கான சமகாலக் கலை நிலையத் தென்கிழக்கு ஆசிய, ஐரோப்பிய ஒன்றிய கலைஞர்களுக்கான பரிமாற்றத் திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.