பெரியோர் கல்வியை மேம்படுத்துவதற்காக புதிய மையம் ஒன்று விரைவில் திறக்கப்படவிருக்கிறது
இந்த நிலையத்தில் பெரியோர் கல்விக்கான ஆய்வு, புத்தாக்க வழிகள் கண்டறியப்படும்.
வேலையிடங்களில் ஏற்பட்டு வரும் மாற்றங்களுக்கு ஏற்ப சிங்கப்பூரர்களைத் தயார்ப்படுத்தும் தேசிய முயற்சியின் ஒரு பகுதியாக பெரியோர் கல்விக்கான நிலையத்தால் (ஐஏஎல்), பெரியோர் கல்விக்கான கூட்டுப்பணி (ஏஎல்சி) மையம் அமைக்கப்படுகிறது.
அர்ப்பணிக்கப்பட்ட மேம்பாட்டுத் திட்டங்கள் மற்றும் கலந்துரையாடல்கள் மூலம் பெரியோருக்கான கல்வியை ஆராய நிறுவனங்கள், பெரியவர்கள், கற்பவர்களுக்கு அங்கு அதிக வாய்ப்புகள் இருக்கும்.
கல்வி அமைச்சர் சான் சுன் சிங் ஜனவரி 19ஆம் தேதி இந்த விவரங்களை வெளியிட்டார்.
பெரியோர் கல்விக்கான நிலையத்தின் பெரியோர் கல்வி பரிமாற்ற நிகழ்ச்சியில் அவர் பேசினார்.
இந்த நிகழ்ச்சி, பெரியோர் கல்வி மற்றும் வாழ்நாள் கற்றல் தொடர்பான கலந்துரையாடல் களுக்கும் கருத்து பரிமாற்றத்திற்கும் தளமாக அமைந்தது.
ஜனவரி 18ஆம் தேதியிலிருந்து ஜனவரி 19 வரை நிகழ்ச்சி ராஃபிள்ஸ் சிட்டி மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
‘ஸ்கில்ஸ்ஃபுயூச்சர் சிங்கப்பூர்’ ஆதரவுடன் ‘ஏஎல்சி’ பிறதுறைகள் மற்றும் கல்வி நிலையங்களின் ஒத்துழைப்புடன் பெரியோர் கல்வியில் எதிர்நோக்கப்படும் பிரச்சினைகளைக் களையும் முயற்சியில் ஈடுபடும். இதற்காக பல சுற்று ஆய்வுகள், சோதனைகள் மேற்கொள்ளப்படும். அது மட்டுமல்லாமல் அதிக சிங்கப்பூரர்கள் பலன் அடைவதற்காக வெற்றிகரமான பெரியோர் கல்வியை அது மேம்படுத்தும்.
கற்றலுக்கு பொருத்தமான உள்ளடக்கத்தை உருவாக்குவது போன்றவற்றில் பெரியோர் கல்வி தொடர்பான சிக்கல்களைத் தீர்ப்பதற்கு சம்பந்தப்பட்ட பங்காளிகள் மற்றும் பங்குதாரர்களின் பலத்தை ஒன்றிணைப்பதில் ‘ஏஎல்சி’ ஒரு நிலையமாகச் செயல்படும் என்று திரு சான் விவரித்தார்.
புதிய 3,500 சதுர அடி பரப்பளவில் புதிய மையம், யூனோஸ் ரோட்டில் உள்ள வாழ்நாள் கற்றல் கழகத்தில் அமைக்கப்படுகிறது.
2024ஆம் ஆண்டின் இரண்டாவது பாதியில் இது திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏஎல்சியின் தொடக்கமாக மூன்று முன்னோடித் திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும். இது, சம்பந்தப்பட்ட அமைப்புகளுடன் சேர்ந்து வேலையிடப் பிரச்சினைகளை ஆராயும்.