ஆடவர் ஒருவர் தமது குடும்ப நண்பர்கள், தமக்குத் தெரிந்தவர்கள் என 20 பேரை முதலீட்டு மோசடியில் கிட்டத்தட்ட $2.5 மில்லியன் ஏமாற்றியுள்ளார்.
அந்தச் சம்பவங்கள் 2008ஆம் ஆண்டுக்கும் 2013ஆம் ஆண்டுக்கும் இடையே நடைபெற்றன.
முரளி கிருஷ்ணன் நாய்டு, 53, என்ற அந்த ஆடவர், அவர்களின் பணம் தமது மனைவி தொடங்கிய கடன்முதலை தொழிலில் முதலீடு செய்யப்படும் என்று அவர்களை நம்பவைத்தார்.
அந்த முதலீடுகளுக்காக பாதிக்கப்பட்டோரில் பலர் தங்களின் ஓய்வுக்கால கணக்கில் இருந்து பணம் எடுத்ததாக நீதிமன்ற ஆவணங்கள் காட்டின.
ஒன்பது பேர் சம்பந்தப்பட்ட 17 ஏமாற்றுக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்ட பிறகு சிங்கப்பூரரான அவருக்கு ஜனவரி 22ஆம் தேதி ஏழாண்டுகள் நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
மேலும் 43 குற்றச்சாட்டுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
அவர் இதுவரை எடுத்த பணத்தை இன்னும் திருப்பிக் கொடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
ஏமாற்றுக் குற்றத்திற்காக ஒருவருக்குப் பத்தாண்டுகள்வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.