‘கிட்ஸ்டார்ட்’ எனப்படும் வசதி குறைந்த குடும்பங்களின் குழந்தைகளுக்கான மேம்பாட்டுத் திட்டத்தின் மூலம் அடுத்த ஈராண்டுகளில் கூடுதலான பிள்ளைகள் உதவிபெறுவர்.
அடுத்த ஆண்டுக்குள் (2025) அத்திட்டம் மேலும் ஒன்பது நகர்ப்புறங்களுக்கு விரிவுபடுத்தப்படும் என்று சமுதாய, குடும்ப மேம்பாட்டுத் துணை அமைச்சர் சுன் ஷுவெலிங், வெள்ளிக்கிழமை (ஜனவரி 26) அறிவித்தார்.
‘கிட்ஸ்டார்ட்’ திட்டம், சத்துணவு, பிள்ளை வளர்ப்பு உத்திகள் போன்ற அம்சங்கள் தொடர்பில் ஆதரவு வழங்குகிறது. அது விரிவுபடுத்தப்படுவதால், தகுதிபெறும் 80 விழுக்காட்டுப் பிள்ளைகள் ஆறு வயது நிரம்புவதற்குள் அத்திட்டத்தின் உதவிகளைப் பெறுவர்.
தற்போது சிங்கப்பூரின் 15 நகர்ப்புறங்களில் 8,500 பிள்ளைகள் ‘கிட்ஸ்டார்ட்’ திட்டத்தின் மூலம் பயனடைந்து வருகின்றனர்.
இந்த ஆண்டு இறுதிக்குள் ஹவ்காங், செங்காங், சிராங்கூன், பொங்கோல், பாசிர் ரிஸ், தெம்பனிஸ் ஆகிய ஆறு நகர்ப்புறங்களில் ‘கிட்ஸ்டார்ட்’ திட்டம் தொடங்கப்படும்.
அடுத்த ஆண்டு குவீன்ஸ்டவுன், கிளமெண்டி, ஜூரோங் ஈஸ்ட் ஆகியவையும் அத்திட்டத்தில் இணையும். அப்போது சிங்கப்பூர் முழுவதும் ‘கிட்ஸ்டார்ட்’ திட்டம் நடப்பில் இருக்கும்.
பிள்ளைகளின் ஆறாம் வயது வரை ஆதரவு வழங்கும் ‘கிட்ஸ்டார்ட்’ திட்டம், கூடுதலான குடும்பங்களுக்கு உதவ இலக்கு கொண்டுள்ளது. அதன் புதிய அணுகுமுறையின்கீழ் கர்ப்ப காலத்திலேயே அத்திட்டத்தில் சேரும்படி தாய்மார்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர்.
தொடக்க ஆண்டுகளில் பிள்ளைகளுக்கு வழங்கப்படும் ஆதரவு அவர்களின் வளர்ச்சியில் நீடித்த, நிலையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ‘கிட்ஸ்டார்ட் சிங்கப்பூர்’ அமைப்பின் தலைமை நிர்வாகி திருவாட்டி ரஹாயு புவாங் கூறினார்.
தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனை, கேகே மகளிர், சிறார் மருத்துவமனை ஆகியவற்றில் கர்ப்பகாலப் பரிசோதனைக்கு வரும்போதே ‘கிட்ஸ்டார்ட்’ திட்டத்தில் பங்கேற்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பிள்ளை பிறந்தவுடன் ‘கிட்ஸ்டார்ட்’ திட்ட முழுநேர அதிகாரி ஒருவர் வீட்டுக்கே சென்று அந்தக் குடும்பத்தினருக்கு உதவுவார். பிள்ளைக்கு ஆறு வயது நிரம்பும்வரை பல்வேறு நிலைகளில் அவரது ஆதரவு கிட்டும்.
‘கிட்ஸ்டார்ட்’ திட்டத்தில் பதிந்துகொண்டவர்களில் திருவாட்டி பிரியலதா மகேந்திரனும் ஒருவர். தனது ஏழு வயது மகன் மித்ரன் சுகுமார் தொடக்கப்பள்ளிக்குச் சிறப்பாகத் தயாரானதாகக் குறிப்பிட்ட அவர், இரண்டு வயது மகள் ருத்ராஷினி சுகுமாரின் தொடர்புத் திறன்கள் மேம்பட்டிருப்பதாகக் கூறினார்.
சென்ற ஆண்டு மூன்றாவது பிள்ளையைக் கருவுற்றிருந்த பிரியலதாவிற்கு ஆதரவளிக்க நியமிக்கப்பட்டார் ‘கிட்ஸ்டார்ட்’ திட்ட அதிகாரி பேர்ள் கோ, 30.
ஏற்கெனவே திருவாட்டி கோ தங்களுக்கு நன்கு பழக்கமானவர் என்றார் திருவாட்டி பிரியலதா. ஒரு குடும்பத்தின் அனைத்துப் பிள்ளைகளுக்கும் ஒரே திட்ட அதிகாரி ஆதரவளிக்க வகைசெய்யும் புதிய அணுகுமுறை இருதரப்புக்கும் நன்மை அளிப்பதாகக் கூறினார் திருவாட்டி கோ.