தைப்பூசம் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படும் இடங்களில் மலேசியாவின் பினாங்கு, தண்ணீர் மலை முருகன் கோயிலும் ஒன்று.
இந்த ஆண்டு பினாங்கு தைப்பூசக் கொண்டாடத்தில் மொத்தம் 1.5 மில்லியன் பக்தர்கள் பங்கேற்றதாக மலேசிய ஊடகங்கள் குறிப்பட்டன.
பக்தர்கள் 511 படிகள் ஏறி தண்ணீர்மலையின் உச்சத்திலுள்ள அருள்மிகு பால தண்டாயுதபாணி கோயிலை அடைந்தனர். பத்து மலையில் 272 படிகள் ஏறவேண்டும். தண்ணீர்மலையின் படிகள், பத்துமலையின் படிகளைவிட உயரமானவை.
தைப்பூசத்தின் முன்தினமும் பிற்பகலிலும் மழை பெய்தபோதும் மக்களின் உற்சாகம் தணியவில்லை. கூட்டம் நிரம்பி வழிந்தபோதும் மக்கள் பொறுமையுடன் நகர்ந்தனர்.
தைப்பூசத்திற்கு முந்திய நாளான செட்டி பூசத்தன்று குவீன் ஸ்திரீட்டிலுள்ள ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்திலிருந்து முருகப்பெருமான் வெள்ளித் தேரிலும், வேல் தங்கத் தேரிலும் அருள்மிகு பால தண்டாயுதபாணி கோயிலுக்குச் சென்றன.
ரதங்களை வரவேற்று ‘ஹுவாட் ஆ’ (வளமை) என்ற வாழ்த்தொலி முழங்க சீனர்களும் தமிழர்களுடன் சேர்ந்து தெருக்களில் தேங்காய் உடைத்தனர். 1856ஆம் ஆண்டிலிருந்து நடைபெற்று வரும் வெள்ளித் தேர் ஊர்வலத்தைக் காண ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.
தைப்பூசத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சக சீன நண்பர்களுடன் கொண்டாடும் லாரி ஓட்டுநர் ப்ரையன் சுவா, 33, தேங்காய் உடைத்து பங்குபெற்ற பிறகு அதிர்ஷ்டத்தை உணர்வதாகக் கூறுகிறார்.
நூற்றுக்கணக்கான தண்ணீர், உணவுப் பந்தல்கள் சாலையெங்கும் சேவையாற்றின. சீனர்களுக்குச் சொந்தமான ஹோட்டல்களும் பந்தல்களை அமைத்திருந்தன.
பினாங்குத் தீவின் பல்வேறு ஆலயக் குழுக்களும் இதற்குக் கைகொடுத்தனர் என்று அருள்மிகு ஸ்ரீ மகா மொட்டை கோபுரம் முனீஸ்வரர் ஆலயத்தின் தலைவர் நித்யானந்தன், 50, தெரிவித்தார்.
பல அமைப்புகளும் நிறுவனங்களும் அன்னமும் தண்ணீரும் வழங்குவதாக பினாங்கைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் கார்த்திக், 38, குறிப்பிட்டார். “தைப்பூச விழாவில் கலந்துகொள்ள பினாங்கு வருவோர் சாப்பாட்டுக்குச் செலவு செய்யவேண்டியதே இல்லை,” என்று அவர் கூறினார்.
சிங்கப்பூரர்கள் குதூகலம்
சிங்கப்பூரர்களும் பினாங்கு மக்களுடன் இணைந்து கொண்டாடுவதைக் காண முடிந்தது.
கடந்த 15 ஆண்டுகளாகத் தண்ணீர்மலை ஆண்டவர் கோயிலில் பால்குடம் செலுத்தும் ஓய்வுபெற்ற முன்னாள் சிங்கப்பூர் எரிசக்தி நிலைய பணியாளர் ரகுநாதன் ரங்கன்சாமி, 74, பினாங்கில் தைப்பூசம் கொண்டாடுவதை மாறுபட்ட அனுபவமாகக் கருதுகிறார்.
சிறுமியாக இருந்த காலத்திலிருந்து தந்தையுடன் பினாங்கிற்கு தைப்பூசம் கொண்டாட வரும் சிங்கப்பூரரான காமினி தேவி சுப்ரமணியம், 38, தேர்களுக்கு முன் தேங்காய் உடைப்பதை வெகுவாக விரும்புவதாகக் கூறினார்.
25 ஆண்டுகளாக தண்ணீர்மலையில் பால்குடம் எடுக்கும் விமான நிலைய அதிகாரி காஞ்சனா, 48, “எப்போதும் மனநிறைவும் பக்தியுணர்வும் மேலோங்குகிறது,” என்றார்.