உலகளாவிய சவால்கள் வர்த்தகத்தையும் முதலீட்டாளர் கண்ணோட்டத்தையும் பாதித்த நிலையில் சிங்கப்பூர் சென்ற ஆண்டு $12.7 பில்லியன் மதிப்பிலான நீண்டகால சொத்து முதலீடுகளை ஈர்த்ததாகப் பொருளியல் வளர்ச்சிக் கழகம் கூறியிருக்கிறது.
ஒப்புநோக்க 2022ஆம் ஆண்டு அது $22.5 பில்லியனாகப் பதிவானது.
சென்ற ஆண்டு முதலீடுகள் குறைந்ததற்கு, பகுதி மின்கடத்திகளுக்கான தேவை குறைந்தது காரணமாகக் கருதப்படுகிறது.
ஜனவரி 30ஆம் தேதி, கழகம் அந்தத் தகவல்களை வெளியிட்டது.
சென்ற ஆண்டு ரசாயனத் துறை ஆக அதிகமாக 35 விழுக்காட்டு முதலீடுகளை ஈர்த்தது. அதைத் தொடர்ந்து மின்னணுத் துறையில் 24.2 விழுக்காட்டு முதலீடுகள் பதிவாயின. ஆய்வு, மேம்பாட்டுத் துறை 16.6 விழுக்காட்டு முதலீடுகளை ஈர்த்தது.
ஒட்டுமொத்தத்தில் இந்த முதலீட்டுத் திட்டங்கள் மூலம் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 20,045 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவ்வாறு உருவாகும் புதிய வேலைகளில் 58 விழுக்காடு சேவைத் துறையைச் சார்ந்திருக்கும். ஆய்வு, மேம்பாடு, புத்தாக்கத் துறைகளில் 26 விழுக்காட்டு வேலைகளும் எஞ்சிய 16 விழுக்காட்டு வேலைகள் உற்பத்தித் துறையிலும் உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மற்ற நாடுகளில் தொழில்துறைக் கொள்கை மீண்டும் சீரமைக்கப்பட்டதால் முதலீடு தொடர்பான போட்டித்தன்மை அதிகரித்திருப்பதாக கழகத்தின் நிர்வாக இயக்குநர் ஜேக்குலின் போ கூறினார்.
மேலும், வட்டி விகித உயர்வு முதலீட்டுக்கு இடையூறு விளைவித்ததாகவும் புதிய நிறுவனங்கள் நிதி திரட்டும் சூழலை அது பாதித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.
“இத்தகைய அம்சங்கள் முதலீடு தொடர்பான கடப்பாட்டைப் பாதிக்கக்கூடியவை. இருப்பினும் வர்த்தகம், புத்தாக்கம், திறனாளர் ஆகிய அம்சங்கள் தொடர்பில் சிங்கப்பூரின் நம்பகத்தன்மை முதலீடுகளை ஈர்ப்பதில் முக்கியப் பங்காற்றுகிறது,” என்றார் அவர்.
சென்ற ஆண்டுக்கான ஒட்டுமொத்த வர்த்தகச் செலவினம் $8.9 பில்லியனாகப் பதிவானது. அது, பொருளியல் வளர்ச்சிக் கழகத்தின் நடுத்தர, நீண்டகால இலக்குக்கு ஏற்ப அமைந்திருந்ததாகக் கூறப்பட்டது.
அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து தரமான முதலீடுகளை சிங்கப்பூர் ஈர்த்துள்ளதாக பொருளியல் வளர்ச்சிக் கழகம் குறிப்பிட்டது. 2022ஆம் ஆண்டுடன் ஒப்புநோக்க, சிங்கப்பூரில் சீன, இந்திய முதலீடுகள் குறைந்தபோதும் ஜப்பானிய நிறுவனங்களின் முதலீடு அதிகரித்ததாகக் கழகம் கூறியது.
இவ்வேளையில், இந்த ஆண்டுக்கான வர்த்தக, முதலீட்டுச் சூழல் சவால் நிறைந்ததாக இருக்கும் என்று அது தெரிவித்தது. புவிசார் அரசியல் பதற்றங்கள், பல நாடுகளில் தேர்தல் நடைபெறவிருப்பதால் கொள்கை நிச்சயமற்றதன்மை, முதலீடு தொடர்பில் அதிகரித்துள்ள போட்டித்தன்மை போன்றவற்றை அது சுட்டியது.
வருங்காலத்தில், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் உள்ளூர் வர்த்தகங்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பிற்கு ஆதரவளிப்பது உள்ளிட்ட முக்கியத் துறைகளில் கவனம் செலுத்தவிருப்பதாகக் கழகம் கூறியது.
வளரும் துறைகளில் சிங்கப்பூரர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்க உதவும் வகையில் பயிற்சி, மறுபயிற்சி ஆகியவை தொடர்பில் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவிருப்பதாக அது சொன்னது.