மனநலச் சேவைகளின் பலன் அதிகமானோரைச் சென்றடையும் வகையில் சமூகத்திற்குள் அச்சேவைகள் வருகின்றன.
அந்தச் சேவைகளில் உள்ள பல்வேறு அம்சங்களை அவற்றுக்கான தேவை உள்ளோரிடம் கொண்டு சேர்க்கவும் சுகாதாரப் பராமரிப்பில் இடம்பெறாத ஊழியர்களை அச்சேவைகளில் உள்ளடக்கவும் அவ்வாறு மாற்றம் செய்யப்படுகிறது.
வரும் 2030ஆம் ஆண்டுக்குள், ஹெல்தியர் எஸ்ஜி திட்டத்தில் இடம்பெற்றுள்ள 1,350 பொதுநல மருந்தகங்களும் அனைத்து பலதுறை மருந்தகங்களும் மனநலச் சேவைகளை வழங்கும்.
சுகாதார மூத்த துணை அமைச்சர் டாக்டர் ஜனில் புதுச்சேரி ஜனவரி 31ஆம் தேதி இதனை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
திங்கட்கிழமை (பிப்ரவரி 5) நாடாளுமன்றத்தில் மனநலம் தொடர்பான மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறி உள்ளார்.
மனநலச் சேவைகளை சமூகத்திற்குள் கொண்டு வந்து பொதுநல மருந்தகங்களும் பலதுறை மருந்தகங்களும் அவற்றை வழங்கும் திட்டம் முதன்முதலில் 2023 அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது.
தற்போது, கிட்டத்தட்ட 450 பொது மருந்தகங்கள் மனநலச் சேவை வழங்குவதற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. அதேபோல, 24 பலதுறை மருந்தகங்களில் 19 மருந்தகங்கள் மனநலச் சேவைகளை வழங்கி வருகின்றன.
மனநலக் கோளாறு உடையோர் அதிகரித்து வருவதைச் சமாளிக்க ஆற்றல் மிகுந்த மனநலச் சுற்றுச்சூழலை அமைக்க சிங்கப்பூர் திட்டமிடுகிறது.
மனநலம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான அனைத்து அமைப்புகளின் பணிக்குழுவுக்கு டாக்டர் ஜனில் தலைமை வகிக்கிறார். அந்தக் குழு 2023 அக்டோபர் 5ஆம் தேதி தேசிய மனநல, நல்வாழ்வு உத்தியை தொடங்கியது. கிட்டத்தட்ட இரண்டரை ஆண்டு கால ஆய்வுக்குப் பின்னர் அந்த உத்தி தொடங்கப்பட்டது.
அந்த உத்தி பற்றி விவாதிக்க ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் மசோதா ஒன்றை தாக்கல் செய்து உள்ளனர்.