சிங்கப்பூரின் கல்வி முறை பலரை ஈர்க்கும் ஒன்றாக, ஆனால் எளிதில்லாத ஒன்றாக உள்ளது.
அது மாணவர்கள், பெற்றோர் மீது அழுத்தத்தைத் தருகிறது என்று பிரதமர் லீ சியன் லூங் சனிக்கிழமை (பிப்ரவரி 3) அன்று கூறினார்.
இதுபற்றி மாணவர்கள், பெற்றோர் ஆகியோரிடம் பேசிய பிரதமர், கல்வியை சீரிய நோக்குடன் எதிர்கொள்வது நல்லது, ஆனால் அதற்காக அதிக அழுத்தத்தை ஏற்படுத்திக் கொள்வது நல்லதல்ல என்று அறிவுறுத்தினார்.
“கல்வி முறையை சமநிலைப்படுத்த முயற்சி செய்து வருகிறோம். அதன்படி, அது தரக்கூடிய அழுத்தத்தை மிதமாக்கப் பார்க்கிறோம். இதனால் ஒருவர் சீரிய முறையில், இதற்கு மேல் என்னால் முடியாது என்று கூறாமல், படிக்கலாம்,” என்று பிரதமர் தெரிவித்தார்.
பிரதமர் லீ, அங் மோ கியோவில் தாம் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள டெக் கீ தொகுதி மாணவர்களுக்கு எடுசேவ் விருதுகளை வழங்கும்போது மேற்கண்டவாறு சொன்னார்.
கல்வி அமைச்சு அண்மைய ஆண்டுகளில் மாணவர்களுக்கு அழுத்தத்தை குறைக்கும் வகையில் கொண்டு வந்த மாற்றங்களை திரு லீ குறிப்பிட்டார். தொடக்கநிலை 1, 2க்கு தேர்வுகள் இல்லாதது, தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வுகளில் (பிஎஸ்எல்இ) ‘டி ஸ்கோர்’ முறையை நீக்கியது, உயர்நிலைப் பள்ளி கல்வியில் வெவ்வேறு பிரிவுகளுக்கு மாணவர்களைப் பிரிப்பதற்கு மாற்றாக அவர்களுக்கு பாட அடிப்படையிலான தரநிலையை அறிமுகப்படுத்தியது ஆகியவற்றை பிரதமர் லீ பட்டியலிட்டார்.
இவற்றுடன், அரசாங்கம் மாணவர்களின் மனநலன், உடல்நலன் ஆகியவற்றையும் வலியுறுத்தி வருவதாகக் கூறிய பிரதமர், இதைத் தொடர்ந்து மாணவர்கள் அழுத்தம் அடைய நேரிட்டால் அவர்கள் உதவி கோரலாம் என்றும் விளக்கினார். இதில் ஆசிரியர்களும், ஆலோசகர்களும் மாணவர்களுக்கு வழிகாட்டுவர். அவர்களிடம் கருத்துக் கேட்பர். அது மாற்றங்கள் கொண்டுவர உதவியாக இருக்கும் என்றும் பிரதமர் தெளிவுபடுத்தினார்.
சனிக்கிழமை (பிப்ரவரி 3) அன்று பிரதமர் லீ பங்கேற்ற எடுசேவ் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில், மாணவர்களுக்கு 441 விருதுகளை வழங்கினார். இரண்டு நாள்கள் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், கிட்டத்தட்ட 920 மாணவர்கள் விருதுகளைப் பெற்றனர்.
இளையர்களை ஊக்குவிக்கும் அரசாங்கம் அவர்களுக்காக செய்யக்கூடிய மிக முக்கியமான பணிகளில் இதுவும் ஒன்று என பிரதமர் கருத்துரைத்தார்.
“நாம் மிகவும் நிச்சயமற்ற உலகில் வளர்ந்து வருகிறோம். அது சில சமயங்களில் ஆபத்தானதும்கூட. நம்மை நாமே கவனித்துக் கொள்ள வேண்டும். நாம் கடுமையாக உழைத்தால் மட்டும் போதாது, புத்திசாலித்தனமாக வேலை பார்த்து என்ன செய்யலாம் என யோசிக்க வேண்டும், அதை மேலும் சிறப்பாக எப்படி செய்யலாம் என்று சிந்திக்க வேண்டும்,” என்று அவர் அறிவுரை வழங்கினார்.
பிரதமர், டெக் கீ குடிமக்கள் ஆலோசனைக் குழுவினரின் கல்வி உதவி நிதியையும் குறைந்த வருமானக் குடும்ப மாணவர்களுக்கு வழங்கினார். இதற்காக, சமூக நன்கொடையாளர்கள் $190,000ஐ திரட்டினர்.