உயர்நிலைப் பள்ளி நேரடிச் சேர்க்கைக்கு, தகுதிபெறும் மாணவர்கள் எண்ணிக்கையைவிட அதிகமான இடங்கள் இருப்பதாகக் கல்வி அமைச்சர் சான் சுன் சிங் கூறியிருக்கிறார்.
ஒவ்வோர் ஆண்டும் கல்வி அமைச்சு பள்ளி நேரடிச் சேர்க்கைக்குக் கிட்டத்தட்ட 20 விழுக்காடு இடங்களை ஒதுக்குகிறது. சென்ற ஆண்டு (2023) அது ஏறக்குறைய 8,000க்குச் சமம்.
இத்திட்டத்தின்கீழ் சென்ற ஆண்டு சேர்க்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை ஏறத்தாழ அதில் பாதியாக, அதாவது 4,400ஆக இருந்தது.
“சிங்கப்பூர் பள்ளிகளில், தகுதிபெறும் மாணவர்கள் பள்ளி நேரடிச் சேர்க்கை மூலம் சேர்வதற்குப் போதிய இடங்கள் உள்ளன. இப்போதைய நிலவரப்படி அந்த எண்ணிக்கையை விரிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை,” என்று பிப்ரவரி 5ஆம் தேதி அளித்த எழுத்துபூர்வ பதிலில் அமைச்சர் சான் குறிப்பிட்டார்.
அங் மோ கியோ குழுத்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டேரல் டேவிட்டின் கேள்விக்குப் பதிலளிக்கையில் அவர் அவ்வாறு கூறினார்.
கல்வி சாராத பிற துறைகளான விளையாட்டு, கலை போன்றவற்றில் மாணவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் வண்ணம் பள்ளி நேரடிச் சேர்க்கை முறை 2004ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் மூலம், தொடக்கப் பள்ளி இறுதித் தேர்வை எழுதுவதற்கு முன்பே மாணவர்கள் உயர்நிலைப் பள்ளிகளில் சேர இயலும்.
2019ஆம் ஆண்டு இத்திட்டத்தின் மூலம் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 3,500 என்று திரு சான் கூறினார். அப்போதைய நிலவரப்படி அது தொடக்கப் பள்ளி இறுதியாண்டு மாணவர் எண்ணிக்கையில் ஒன்பது விழுக்காடு.
ஒப்புநோக்க, 2023ல் அந்த விகிதம் 11 விழுக்காடாகப் பதிவானது. சென்ற ஆண்டு, முன்னெப்போதையும்விட அதிகமாக, 14,500 மாணவர்களிடமிருந்து பள்ளி நேரடிச் சேர்க்கைக்காக 38,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் விளையாட்டுத் திறனுக்காகவும் கால்வாசிப் பேர் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகள் சார்ந்த திறனுக்காகவும் விண்ணப்பித்தனர். எஞ்சியவர்கள் தலைமைத்துவம், சீருடைக் குழுக்கள், நிகழ்கலை, தொழில்முனைப்பு, புத்தாக்கம், மொழித்திறன், ஊடகம் உள்ளிட்ட துறைகள் சார்ந்த திறனுக்காக விண்ணப்பம் செய்திருந்தனர் என்று அமைச்சர் சான் குறிப்பிட்டார்.
நாடாளுமன்ற உறுப்பினர் டேவிட் இந்தச் சேர்க்கை முறை மேலும் பல்வேறு திறன்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் விரிவுபடுத்தப்படுமா என்று கேட்டிருந்தார்.
அதற்குப் பதிலளிக்கும் வகையில், “கடந்த ஆண்டுகளில் பள்ளிகள், பல்வேறு திறன்களை அங்கீகரிக்கும் விதமாகவும் மாணவர்களின் திறன், ஆர்வம், நடத்தை, மீள்திறன், ஊக்கம் போன்றவற்றைக் கருத்தில் கொண்டும், நேரடிச் சேர்க்கைக்கான செயல்முறையை விரிவுபடுத்தியுள்ளன.
“இம்முறையின்கீழ் மாணவர்களின் பல்வேறு திறன்கள் அங்கீரிக்கப்படுவதை உறுதிசெய்யும் விதமாகக் கல்வி அமைச்சு இதன் தொடர்பில் பள்ளிகளுடன் தொடர்ந்து கூட்டாகச் செயலாற்றும்,” என்று அமைச்சர் சான் உறுதியளித்தார்.