கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 10 பேரில் சு ஜியாங்ஃபெங் மீது பிப்ரவரி 8ஆம் தேதி மேலும் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.
இந்த பத்து பேர் தொடர்பான வழக்கு, கள்ளப் பணத்தை நல்ல பணமாக்கிய குற்றம் தொடர்பாக சிங்கப்பூரில் நடத்தப்படும் ஆகப் பெரிய வழக்கு.
சீன நாட்டவராக இருந்து, பிறகு வனுவாட்டு நாட்டு குடியுரிமை பெற்ற 35 வயது சு, வங்கிகளிடம் போலி ஆவணங்கள் சமர்ப்பித்ததாகக் கூறப்படுகிறது.
சீன நிறுவனத்தின் ஆண்டு அறிக்கை என்று கூறி போலி ஆவணங்களை ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் வங்கியிடமும் சிங்கப்பூர் வங்கியிடமும் அவர் சமர்ப்பித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுவின் வழக்கிற்கு முந்தைய கலந்துரையாடல் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெறுகிறது.
இவ்வாண்டு ஜனவரி மாதத்தில் இந்த வழக்கு தொடர்பாக $3 பில்லியன் பெறுமானமுள்ள சொத்துகளும் விலைமதிப்புமிக்க பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
207 சொத்துகள், 77 வாகனங்கள், வங்கிக் கணக்குகளில் $1.45 பில்லியனுக்கும் அதிகமான பணம், பல்வேறு நாணயங்களில் $76 மில்லியனுக்கும் அதிகமான ரொக்கம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களில் அடங்கும்.