மின்னிலக்க சிவப்பு பரிசு அட்டையைக் கொடுத்து, விழாக்கால மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ள விரும்பும் டிபிஎஸ் வங்கி வாடிக்கையாளர்கள், அந்தப் பரிசு அட்டையை ஒருமுறைதான் பயன்படுத்த முடியும் என்று நினைவூட்டப்படுகிறார்கள்.
மேலும் ரொக்கம் ஏற்றப்பட்ட அந்த அட்டையை அவர்கள் தொலைத்து விட்டால், அவர்கள் பேலா சேவை வழியாக அதை ரத்து செய்து விடலாம் என்று ஆலோசனை கூறப்படுகிறது.
பாரம்பரிய சிவப்பு ரொக்க உறைக்குப் பதிலாக டிபிஎஸ் கியூஆர் பரிசு அட்டை வழங்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் கியூஆர் குறியூட்டை வருடி அதன் மூலம் அட்டையில் ரொக்கத்தை நிரப்பிக் கொள்ளலாம்.
டிபிஎஸ் வங்கி வாடிக்கையாளர்கள் அல்லாதவர்களும் கியூஆர் பரிசு அட்டையைப் பெறலாம். ஆனால் அவர்கள் பேநவ் சேவையைப் பெற்றிருக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் இந்த அட்டையை எந்தவொரு டிபிஎஸ் அல்லது பிஓஎஸ்பி வங்கியிலும் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், முன்பின் அறிமுகமில்லாதவர்களிடமிருந்து அட்டையைப் பெற வேண்டாம். மேலும் அட்டையில் சந்தேகத்துக்குரிய மாற்றம் இருந்தால், அவற்றில் பணத்தை நிரப்ப வேண்டாம் என்றும் ஆலோசனை கூறப்படுகிறது.