இணையத்தில் தேடாமலே மனதுக்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் வருவதாக 10ல் ஆறு இளையர்கள் தெரிவிக்கின்றனர்.
இதனால் அவர்கள் மனரீதியாக பாதிக்கப்பட்டதாக கூறினர் என்று ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இணையத்தினால் விளையும் ஆபத்துகள், நல்வாழ்வு குறித்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
உடல் ரீதியான காட்சிகள், வரைபடத்துடன் கூடிய வன்முறைக் காட்சிகள், நிர்வாண மற்றும் உடலுறவுக் காட்சிகள், சுகாதாரமற்ற உணவுப் பழக்கங்கள், பாலியல் ரீதியிலான வெறுப்புணர்வுத் தூண்டுதல் அல்லது அவதூறு பரப்புதல் ஆகியவை மனதுக்கு ஊறு விளைவிப்பவையாக உள்ளது என்று ஆய்வு கூறுகிறது.
‘எஸ்ஜி ஹர் எம்பவர்மண்ட்’, என்ற லாப நோக்கமற்ற அமைப்பும் ‘குளோபல் ஷேப்பர்ஸ் ஹப்’ என்ற அமைப்பும் இந்த ஆய்வை மேற்கொண்டன.
இது 30 வயதுக்குக் கீழ் உள்ள இளையர்களின் கட்டமைப்பு. இவை வியாழக்கிழமை (பிப்ரவரி 8) அன்று இணைய குழு ஒன்றிடம் தமது ஆய்வு முடிவுகளை வெளியிட்டது. இந்த ஆய்வில் மொத்தம் 500 பேர் கலந்துகொண்டனர். இவர்கள் அனைவரும் 16 வதுக்கும் 35 வயதுக்கும் இடைப்பட்ட சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகள்.
இணையக் குழுவில் கலாசார, சமூக, இளையர்துறை மற்றும், சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சுகளின் மூத்த நாடாளுமன்றச் செயலாளர் எரிக் சுவா, மெட்டா நிறுவனத்தின் பாதுகாப்பு அதிகாரி டாக்டர் பிரியங்கா பல்லா, ‘குளோபல் ஷேப்பர்ஸ்’ சிங்கப்பூர் ஹப் அமைப்பின் கலிசா மான் ஆகியோர் பங்கேற்றனர்.
தேடாமலே ஊறு விளைவிக்கும் காட்சிகளைக் கண்டதாகக் கூறுவோரில், 68 விழுக்காட்டினர் தாங்கள் கண்ட காட்சிகளால் கவலையடைந்ததாகத் தெரிவித்தனர். அதில் பாதிப் பேர் இவ்வாறு சில மணிநேரங்களாவது பாதிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினர்.