வழக்கு விசாரணையின்போது குற்றவாளிகளை அடையாளம் காண உதவும் தடயவியல் மருத்துவப் பரிசோதனைகளின் முக்கியத்துவம் குறித்துக் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் திரு முகமது அமீன் மஜித் பிப்ரவரி 8ஆம் தேதியன்று ஊடகங்களிடம் பேசினார்.
குற்றவியல் நடைமுறை (பல அம்ச திருத்த) மசோதா பிப்ரவரி 5ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
அதனைத் தொடர்ந்து திரு மஜித் தடவியல் பரிசோதனையின் முக்கியத்துவம் குறித்து ஊடகங்களிடம் விளக்கினார்.
சிங்கப்பூர் காவல்துறைக்கு இரண்டு தனித்தனி பாலியல் வன்கொடுமை வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க தடயவியல் மருத்துவப் பரிசோதனைகள் முக்கியமாக இருந்தன. அந்தப் பரிசோதனையின் முடிவுகள் குற்றவாளிகள் தங்கள் குற்றங்களை ஒப்புக்கொள்ளச் செய்தன.
2019ஆம் ஆண்டுக் கிராஞ்சியில் நிகழ்ந்த பாலியல் வன்கொடுமை அதற்கு எடுத்துக்காட்டாக உள்ளது.
ஆடவர் ஒருவர், 23 வயதான பல்கலைக்கழக மாணவி ஒருவரைத் தாக்கியதோடு அவரைக் கிராஞ்சியில் இருக்கும் காட்டுப் பகுதிக்குள் இழுத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பிச் சென்றார்.
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட தடவியல் மருத்துவப் பரிசோதனையில் அப்பெண்ணின் அந்தரங்க உறுப்பில் ஆடவர் ஒருவரின் டி.என்.ஏ மாதிரி இருப்பது கண்டறியப்பட்டது. அது குற்றவாளியான இந்திய நாட்டவரான சின்னையா கார்த்திக்கின் டி.என்.ஏ மாதிரியுடன் ஒத்துப்போனது.
இவ்வழக்கில், குற்றவாளிக்கு 16 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 12 பிரம்படிகளும் தண்டனையாக 2023ஆம் ஆண்டு விதிக்கப்பட்டது.
”இவ்வழக்கின் விசாரணைக்குத் தடயவியல் மருத்துவப் பரிசோதனைகள் பெரிதும் உதவின. இது ஒன்று மட்டுமே எங்களுக்குக் குற்றவாளியைக் கண்டுபிடிக்க ஒரு துருப்புச் சீட்டாக இருந்தது,” என்றார் திரு மஜித்.
கிராஞ்சி வனப்பகுதிக்கு அருகிலிருந்த கண்காணிப்புப் புகைப்படக் கருவியைப் பயன்படுத்தி, வெளிநாட்டு ஊழியர்கள் தங்குமிடங்கள் மற்றும் வீட்டுத் தோட்டங்களில் வசித்த பல சந்தேக நபர்களைக் காவல்துறையினர் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்தனர்.
பின்னர், குற்றவாளி உட்பட அனைத்து சந்தேக நபர்களுக்கும் டிஎன்ஏ சோதனை நடத்தப்பட்டது.
விசாரணையின் ஆரம்பக் கட்டத்தில், குற்றவாளி சின்னையா நேர்மையற்றவராகவும் விசாரணைக்கு ஒத்துழைக்காதவராகவும் இருந்ததாக திரு மஜித் கூறினார்.
“இதனால்தான் இவ்வழக்கில் தடயவியல் மருத்துவப் பரிசோதனை மிகவும் முக்கியமானதாக கருதப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணிடமிருந்து எடுக்கப்பட்ட டி.என். ஏவுடன் சின்னையாவின் டி.என். ஏ ஒத்துபோனது. அவர்தான் குற்றவாளி என்பதை எங்களுக்கு இப்பரிசோதனை முடிவே காட்டிக்கொடுத்தது,” என்றார் அவ்வழக்கின் விசாரணை அதிகாரியாக இருந்த திரு மஜித்.
தடயவியல் மருத்துவப் பரிசோதனையில் உடல்ரீதியான மருத்துவப் பரிசோதனைகள், உடல் உறுப்புகளிலிருந்து மாதிரிகளைப் பெறுவது, படங்கள் எடுப்பது, அந்தரங்க உறுப்புகள் உட்பட உடல் உறுப்புகளின் வடிவங்களைப் பதிவு செய்தல் ஆகியவை அடங்கும்.
அதன்படி, பிப்ரவரி 5ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குற்றவியல் நடைமுறை சடத்தின்படி, பாலியல் குற்றங்கள் தொடர்பில் குற்றச்சாட்டை எதிர்நோக்குபவர்கள் தகுந்த காரணமின்றி தடயவியல் பரிசோதனைக்கு உட்பட மறுத்தால், அவர்களுக்கு ஏழாண்டுகள் வரை சிறைத் தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.