சிங்கப்பூர் உளவியலாளர்கள் சிலர், தங்கள் பணி தொடர்பான மேம்பட்ட விதிமுறைகள் தேவை என்றும் மனநலப் பிரச்சினைகளைக் கையாள்வதில் தங்கள் பங்களிப்பு குறித்த கூடுதல் புரிதல் தேவை என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேம்பட்ட மனநலத்துக்கு தேசிய அளவிலான ஆதரவு வழங்கும் பொருட்டு, பொதுத்துறையில் உளவியலாளர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிடும் வேளையில் அவர்களது கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
2023ஆம் ஆண்டு நடப்புக்கு வந்த சுகாதாரப் பராமரிப்புச் சட்டத்தின் ஓர் அங்கமாக, உளவியலாளர்கள் ‘சிகிச்சை’ என்ற சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்றும் விளம்பரங்களில் தாங்கள் மருத்துவர்கள் அல்லர் என்பதைத் தெளிவுபடுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது. இது குறித்து தனியார் துறை உளவியலாளர்கள் சிலர் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
விதிமுறைக் கட்டமைப்பு இந்தப் பணி தொடர்பான தரநிலையை உயர்த்தும் என்று உளவியலாளர்களும் சிங்கப்பூர் உளவியல் சங்கம் (எஸ்பிஎஸ்) உள்ளிட்ட கவனிப்பாளர்களும் கூறினர். அண்மையில் அமலுக்கு வந்த சுகாதாரப் பராமரிப்புச் சட்டத்தின் அறிவிப்புகளைவிட அத்தகைய கட்டமைப்பு மேலும் ஆக்ககரமாக இருக்கும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.
‘பிஎச்டி’ எனப்படும் முனைவர் பட்டம் வைத்திருப்போரும் ஆய்வுக்கல்விப் பட்டம் பெற்றோரும், விளம்பரங்களில் தங்கள் பெயருக்கு முன்னால் வரும் ‘டாக்டர்’ எனும் சொல், மருத்துவப் பட்டம் அல்லது பல்மருத்துவத் தகுதியைக் குறிக்கவில்லை என்று தெளிவுபடுத்துவது அச்சட்டத்தின்கீழ் கட்டாயம்.
உளவியல் சேவையை மேம்பட்ட முறையில் நெறிப்படுத்துவதும் கூடுதலான வெளிப்படைத்தன்மைக்கு வகைசெய்வதும் உளவியலாளர்களின் சேவை குறித்துப் பொதுமக்களிடையே தவறான புரிதல் ஏற்படுவதைத் தவிர்ப்பதும் இதன் நோக்கம்.
இந்த மாற்றங்கள் குறித்து எஸ்பிஎஸ் கடந்த ஜனவரி மாதம் சுற்றறிக்கை அனுப்பியது. இச்சங்கத்தில் உளவியலாளர்கள் 700 பேர் உறுப்பினர்களாகப் பதிவுசெய்து கொண்டுள்ளனர். இவர்களில் 174 பேருக்கு ‘டாக்டர்’ பட்டம் உள்ளது. இவர்கள் முனைவர் பட்டம் அல்லது உளவியல் துறையில் ஆய்வுக்கல்விப் பட்டம் பெற்றவர்கள்.
இத்தகையோர் ‘சிகிச்சை’ எனும் சொல்லைப் பயன்படுத்தக்கூடாது என்றால், உளவியல் சிகிச்சைமுறை குணப்படுத்தும் ஆற்றல் கொண்டது அன்று எனப் பொருள்படும் என்கிறது இச்சங்கம்.
பெரும்பாலான மனநலச் சிக்கல்கள் குணப்படுத்தக்கூடியவை என்ற நிலையில், ‘சிகிச்சை’ எனும் சொல்லைப் பயன்படுத்தாமலிருப்பது திசைதிருப்பக்கூடியதாக அமையும். மருந்துகளை அதிகம் நாடும் போக்குக்கும் இது வித்திடும் என்று சங்கம் கூறுகிறது.
மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள் என இருதரப்பினருமே முறையான பயிற்சி பெற்றவர்கள். இவர்கள் இணைந்து தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்கின்றனர். சிங்கப்பூரிலும் உலகெங்கும் பயன்படுத்தப்படும் பல்வேறு சிகிச்சைக் கையேடுகளை உளவியலாளர்கள்தான் உருவாக்கினர் என்பதை அது சுட்டியது.
உளவியலாளர்கள் விளம்பரங்களில் ‘சிகிச்சை’ எனும் சொல்லைப் பயன்படுத்தும் சாத்தியக்கூறு குறித்து சுகாதார அமைச்சுடன் தொடர்ந்து சந்திப்புகளை நடத்தவிருப்பதாக சங்கம் கூறியது. ‘சிகிச்சை’ என்பதற்குப் பதில் ‘ஆதரவு’ எனும் சொல்லைப் பயன்படுத்தலாம் என்று அமைச்சு கூறியுள்ளது. ஆலோசனைகளுக்குப் பிறகே ‘டாக்டர்’ எனும் பட்டத்தைப் பயன்படுத்துவது தொடர்பான கட்டுப்பாடு விதிக்கப்பட்டதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.