ரயில்கள், ரயில் நிலையங்களில் கேட்டு இன்புறும் இசை இனி நிரந்தரமாக ஒலிக்க உள்ளது.
இந்த இசை இனி படிப்படியாக அனைத்து ரயில்களிலும் வடக்கு-தெற்கு, கிழக்கு-மேற்கு மற்றும் வட்ட ரயில் தடங்களிலும் புதன்கிழமை பிப்ரவரி 14 முதல் ஒலிக்க உள்ளது.
இந்த இசை ஒலி மூன்று மாத அறிமுகத் திட்டமாக கடந்த 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டது. பார்வைக் குறைபாடு உள்ளவர்களை ரயில் பயணங்களில் ஈடுபடுத்தும் முயற்சியாக இது மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
“இந்த இசை ஒலிப்பு கடந்த அக்டோபரிலிருந்து மூன்று மாத அறிமுகத் திட்டமாக இருந்தபோது பயணிகள் தந்த ஆதரவு, அவர்களிடம் பெறப்பட்ட கருத்துச் சேகரிப்பு ஆகியவற்றுக்கு அவர்களுக்கு நன்றி கூறிக்கொள்கிறேன்.
“சமூக ஊடகம், மற்ற வலைத்தளங்கள் உட்பட பல இடங்களிலிருந்து கிடைத்த ஆக்ககரமான கருத்துகள் எங்களுக்கு ஊக்கமளித்துள்ளன. ரயில்களில் இசை தங்களை உற்சாகப்படுத்தியதாகவும் கேட்பதற்கு இனிமையாக இருந்ததாகவும் பயணிகள் தெரிவித்தனர். அத்துடன், இந்தத் திட்டம் நிரந்தரமாக இடம்பெற வேண்டும் என்றும் அவர்கள் கேட்டுக்கொண்டனர்,” என்று எஸ்எம்ஆர்டி நிறுவனத்தின் தலைவர் லாம் ஷியாவ் காய் தெரிவித்தார்.
இதற்கிடையே, இசையின் ஒலி அளவு, ஒலிக்கும் நேரம் ஆகியவற்றைச் சரிசெய்து பயணிகளின் கவலைகளைத் தீர்க்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.