உயர்நிலை 4 மாணவரான தியா மனு உட்பட சீடார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் பிப்ரவரி 15ஆம் தேதி தயார்நிலை உணவை உண்டனர்.
பொட்டலத்தில் வந்த பிரியாணி சோறு, கோழி உணவு, உண்மையில் மிகவும் சுவையாகவும், சமநிலையான உணவாகவும் இருந்ததுடன் தேவையான அனைத்து ஊட்டச்சத்துகளையும் கொண்டிருந்ததாக 15 வயது தியா கூறினார். ராணுவத்தில் போர்க்காலத்தில் வழங்கப்படும் உணவைப்போல இருக்கும் என்று அவர் முதலில் நினைத்திருந்தார்.
இவ்வாண்டின் முழுமைத் தற்காப்பு தின நடவடிக்கைகளின் ஓர் அங்கமான உணவுப் பங்கீட்டுப் பயிற்சியில் தியாவும் அவரது பள்ளித் தோழர்களும் பங்கேற்றனர்.
உணவு நெருக்கடிநிலை பற்றி அறிந்துகொண்ட 40 உயர்நிலைப் பள்ளிகளில் சீடார் பெண்கள் பள்ளியும் ஒன்று. பள்ளி உணவு நிலைய உணவுகளுக்குப் பதிலாக தயார்நிலை உணவை அவர்கள் உண்டனர்.
கல்வி அமைச்சர் சான் சுன் சிங், நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புறத்துக்கான மூத்த துணை அமைச்சர் ஏமி கோர் ஆகியோர் மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.
முழுமைத் தற்காப்பின் முக்கியத்துவம், அவசரநிலைக்குத் தயாராவதற்கான வழிகள் குறித்து ஆசிரியர்கள் பேசினர்.
அவசரகாலத்துக்குத் தயாராக சிங்கப்பூர் பொருள்களைச் சேமித்து வைப்பது குறித்துப் பேசிய திரு சான், இடையூறுகள் ஏற்பட்டால் உணவைச் சேமித்து வைக்கும் முறை பற்றி விளக்கினார்.
எஸ்ஜி தயார்நிலை பாவனைப் பயிற்சிகளில் உணவு விநியோக இடையூறு பயிற்சியும் ஒன்று. மற்றவை, தண்ணீர், மின்சார விநியோக இடையூறுகள் தொடர்பானவை. அவை தீவு முழுவதும் 500க்கும் மேற்பட்ட அமைப்புகளால் நடத்தப்பட்டன.
இவற்றில் 50,000 மாணவர்கள், ஆசிரியர்களை ஈடுபடுத்தி சிங்கப்பூரிலுள்ள 352 பள்ளிகள் பங்கேற்றன.
ஜூரோங் வெஸ்ட் உயர்நிலைப்பள்ளியில் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டபோது, மாணவர்கள் எவ்வாறு சமாளித்தனர் என்பதை அறிய கல்விக்கான இரண்டாம் அமைச்சர் டாக்டர் மாலிக்கி ஒஸ்மான் அங்கு சென்றிருந்தார்.
தீவெங்கும் முதன்முறையாக இடம்பெறும் முழுமைத் தற்காப்புப் பயிற்சியின் பல நிகழ்வுகளில் ஒரு பகுதியாக பிப்ரவரி 15, 16 தேதிகளில் இந்த விநியோக இடையூறு பாவனைப் பயிற்சிகள் இடம்பெறுகின்றன.
40வது முழுமைத் தற்காப்பு தினத்தை நினைவுகூரும் வகையில் நடைபெறும் இந்தப் பயிற்சி, நெருக்கடிகளுக்கும் இடையூறுகளுக்கும் சிங்கப்பூரர்களைத் தயார்படுத்தும் நோக்கில் பிப்ரவரி 29ஆம் தேதி வரை நடைபெறும்.
தயார்நிலை உணவுகளை சிங்கப்பூர் உணவு அமைப்பும் சாங்கி விமான நிலைய விமான உணவு சேவை வழங்கும் சாட்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்தன.
உணவு அமைப்புடன் இணைந்து கல்வி அமைச்சு, சிங்கப்பூர் முழுவதும் உள்ள பள்ளிகளுக்கு மூன்று வகையான உணவுகளை வழங்கியது. வேகவைத்துத் தயாரான மீன், பதப்படுத்தப்பட்ட காய்கறி அல்லது மக்கானி சிக்கன் பிரியாணி சோற்றுடன் வழங்கப்பட்டது. அனைத்தும் ஹலால் சான்றிதழ் பெற்றவை.
காய்கறி உணவை உண்ட 16 வயதான சீடார் பெண்கள் உயர்நிலைப்பள்ளி மாணவி அக்ஷரா ஸ்ரீ, இந்த பயிற்சி முழுமைத் தற்காப்பின் முக்கியத்துவத்தை உணர வைத்தது என்றார்.
முன்னதாக பிப்ரவரி 15ஆம் தேதி பீச் ரோடு போர் நினைவுச் சின்னப் பூங்காவில் நடந்த 57வது போர் நினைவஞ்சலிக் கூட்ட நிகழ்ச்சியில் பேசிய திரு சான், இவ்வாண்டுப் பயிற்சியின் மூலம் முழுமைத் தற்காப்பின் ஒவ்வொரு தூணின் முக்கியத்துவத்தையும் மாணவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புவதாகக் கூறினார்.