சொத்துச் சந்தையில் முதலீடு செய்வதாகக் கூறி, பணத்தைப் பெற்றுக்கொண்டு மூவரை ஏமாற்றிய பெண்ணுக்கு ஓராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
கம்சத்தோன் ரோஹானி, 57, என்ற அந்த முன்னாள் சொத்து முகவர், கடந்த 2014ஆம் ஆண்டு ஒரு நிறுவனத்தையும் ஒரு வங்கிக் கணக்கையும் தொடங்கினார்.
பின்னர் சொத்துச் சந்தையில் முதலீடு செய்ய வாய்ப்பளிப்பதாகக் கூறி, தம் வாடிக்கையாளர்கள் மூவரிடமிருந்து அவர் பணம் பெற்றார்.
ஆனால், அவர்களிடமிருந்து பெற்ற பணத்தை தன்னுடனும் தன் நிறுவனங்களுடனும் இணைந்து முதலீடு செய்த மற்றவர்களுக்குக் கொடுக்க கம்சத்தோன் பயன்படுத்திக்கொண்டார்.
இவ்வகையில், அம்மூவரிடமும் கிட்டத்தட்ட $85,000 பணத்தை அவர் மோசடி செய்ததாகக் கூறப்பட்டது.
இதனையடுத்து, தன்மீது சுமத்தப்பட்ட மூன்று நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டுகளையும் கம்சத்தோன் வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 15) நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டார்.
சொத்து முகவை மன்றப் பொதுப் பதிவேட்டைச் சோதித்தபோது, அதில் கம்சத்தோனின் பெயர் இடம்பெற்றிருக்கவில்லை என்று ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் செய்தி குறிப்பிட்டது.
முன்னதாக, கடந்த 2020ஆம் ஆண்டு இன்னொரு வாடிக்கையாளரிடம் 26,000 வெள்ளிக்கும் மேல் ஏமாற்றியதற்காக கம்சத்தோனுக்கு 11 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.
அண்மைய வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுமுன் அவர்மீதான மேலும் ஆறு குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.