வரவுசெலவுத் திட்டத்தில் உள்ளூர் வர்த்தங்களை ஆதரிப்பதற்கும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதற்கும் பல முயற்சிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
அவற்றுள் $1.3 பில்லியன் மதிப்பிலான தொழில்நிறுவனங்களுக்கான ஆதரவுத் தொகுப்புத்திட்டம், நிதித்துறை மேம்பாட்டு நிதியில் $2 பில்லியன் கூடுதல் தொகை நிரப்புதல், செயற்கை நுண்ணறிவில் $1 பில்லியனுக்கும் மேற்பட்ட முதலீடு போன்ற பல திட்டங்களும் அடங்கும்.
அவற்றைக் குறித்துத் தம் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர் சிங்கப்பூரின் தொழில் அதிபர்கள்.
வர்த்தகங்களுக்கும்
தொழிலாளிகளுக்கும் நன்மை
“இவ்வாண்டு வரவுசெலவுத் திட்டம் வர்த்தகங்களுக்கும் தொழிலாளிகளுக்கும் நலன் பயக்கிறது.
தொழிலாளிகளுக்குத் தம் திறன்களை மேம்படுத்த வாய்ப்பளிக்கிறது. வயதானோர் ஓய்வுகாலத்திற்குத் தயாராகவும் அது உதவுகிறது.
“அனைத்துலக அளவில் சிங்கப்பூர் வர்த்தகங்கள் அவற்றின் போட்டித்தன்மையை அதிகரிக்க, வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களில் கவனம் செலுத்தவேண்டும்.
“அதற்கு வரவுசெலவுத் திட்டத்தின் தேசிய செயற்கை நுண்ணறிவு உத்தி 2.0 ஆதரவு அளிக்கும்,” என்றார் சிங்கப்பூர் இந்திய வர்த்தக, தொழிற்சபையின் (சிக்கி) தலைவரும் நியமன நாடாளுமன்ற உறுப்பினருமான நீல் பரேக்.
“‘எரிசக்தி சிக்கனத் திறன் மானியத்தை மற்ற துறைகளுக்கும் விரிவுபடுத்தியது சிறப்பு,” என்றார் அவர்.
‘திருப்பித் தரப்படும் வருமான வரி பயனுள்ளது’
ஆரிய பவன் உணவகத்தின் இயக்குநர் தாமரைச் செல்வன், இவ்வாண்டு நிறுவன வருமான வரியில் 50% (அதிகபட்சம் $40,000 வரை) திருப்பித் தரப்படுவது செலவினங்களை நன்கு குறைக்கும் என்றார்.
இவரது நிறுவனத்தில் ஏறக்குறைய 30 பேர் வேலைபார்க்கின்றனர்.
‘நிறுவனங்களுக்குப் புதிய வாய்ப்புகள்’
“தொழில்நிறுவனங்களுக்கான ஸ்கில்ஸ்ஃபியூச்சர் பயிற்சி உதவி நிதியின் ஓராண்டு நீட்டிப்பு (ஜூன் 30, 2025 வரை), வணிகங்களின் செலவுகளைக் குறைக்க உதவும்,” என்றார் நிர்வாக ஆலோசகர் செல்வதுரை மாணிக்கம்.
சுகாதாரப் பராமரிப்பு, பசுமை, நீடித்த நிலைத்தன்மை போன்றவற்றில் நிறுவனங்களுக்கு நல்லாதரவு வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கூடுதல் உதவி தேவை
வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து முதலீடுகளை ஈர்க்க அறிவிக்கப்பட்ட, திருப்பித் தரப்படும் முதலீட்டுத் தொகை எனும் திட்டம் பயனுள்ளதாக இருக்கும் என்றார் சிங்கப்பூர் தெற்காசிய வர்த்தக, தொழிற்சபைத் தலைவர் முனைவர் சின்னு பழனிவேலு.
சிறிய, நடுத்தரத் தொழில்களுக்கு வழங்கப்படக்கூடிய அதிகபட்ச கடன் $500,000க்கு அதிகரிக்கப்பட்டுள்ளதும் அதிகபட்ச வர்த்தகக் கடன் தொகை மார்ச் 31, 2025 வரை நீட்டிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்கது என்றார் அவர்.
எனினும், பெரிய அளவிலான முதலீடுகளுக்கு $500,000 கடன் என்ற வரம்பு சற்றுக் குறைவு என்றும் நிறுவனங்களுக்குக் கூடுதல் சலுகைகள் எதிர்பார்க்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.
திறன் மேம்பாட்டுக்கு
நல்ல உந்துதல்
புத்தாக்க இந்தியக் கலையக நிறுவனர் சி. குணசேகரன், வரவுசெலவுத் திட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் பெருமகிழ்ச்சியளிப்பதாகக் கூறினார்.
ஸ்கில்ஸ்ஃபியூச்சர் திறன் மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் 40 மற்றும் அதற்குமேற்பட்ட வயதுடைய சிங்கப்பூரர்களுக்கு வழங்கப்படும் $4,000 நிதிக்கு அவரும் தகுதிபெறுவார். அதன்மூலம் செயற்கை நுண்ணறிவு, விவசாயத் தொழில்நுட்பப் பாடங்களைப் பயின்று தன் நிறுவனத்தை மேம்படுத்தவுள்ளதாக அவர் கூறினார்.
முழுநேரப் படிப்புகளைப் பயில ஸ்கில்ஸ்ஃபியூச்சர் சலுகைகளைப் பயன்படுத்தவும் வெளிநாடுகளுக்குத் தன் நிறுவனத்தை விரிவுபடுத்தவும் வரவுசெலவுத் திட்டம் வழிவகுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.