‘தமிழ் முரசு காப்பிக் கடை’ வலையொளிக்கான வரவுசெலவுத் திட்டம் 2024ஐ ஒட்டிய முதல் கலந்துரையாடலில் இளையர்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர்.
வாழ்க்கைச் செலவினம் அதிகரித்துவரும் வேளையில் யாரும் பின்தங்காமலிருக்க உதவிக்கரம் நீட்டும் விதமாய் இந்த ஆண்டின் வரவுசெலவுத் திட்ட அறிவிப்புகள் அமைந்துள்ளன என்பதே அவர்களின் ஒருமித்த கருத்து.
துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் கடந்த வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 16) நாடாளுமன்றத்தில் வரவுசெலவுத் திட்டத்தை வெளியிட்டதன் நேரலையை அவ்விளையர்கள் தமிழ் முரசு அலுவலகத்தில் இருந்தபடி பார்த்தனர்.
வாடகை வீட்டில் வசிக்கும் வசதிகுறைந்த மக்களுக்குக் கைகொடுக்கும் கொம்லிங்க் பிளஸ் திட்டத்திற்கான உதவி விரிவுபடுத்தப்படும் என்ற அறிவிப்பை வரவேற்பதாக அடித்தள அமைப்புத் தலைவர் ஜெகதீஷ்வரன் ராஜூ, 37, கூறினார்.
அரசியல் அறிவியல் மாணவராக இருந்தபோதும், தமது முன்னைய வேலைக்காகவும் வரவுசெலவுத் திட்டங்களை அணுக்கமாகப் பின்தொடர்வதாகக் கூறிய யுவன் மோகன், 35, ஒதுக்கப்படும் நிதியின் அளவைப் பொறுத்தே ஒரு திட்டத்தின் முக்கியத்துவம் உணரப்படுவதாகக் கூறினார்.
செலவுகளை ஈடுகட்ட உதவும் யு-சேவ், சிடிசி பற்றுச்சீட்டுகள் போன்ற பொதுவான திட்டங்களுடன் மூத்தோர், வசதிகுறைந்தோருக்கென வகுக்கப்பட்ட கொள்கைகள் இவ்வாண்டு மேலும் வலுப்பெற்றிருப்பதை அவர் சுட்டினார்.
“செயற்கை நுண்ணறிவு பற்றி வரவுசெலவுத் திட்டம் ஒன்றில் பேசப்பட்டதும் எரிசக்தித்துறை இந்நாட்டின் தற்காப்பு உத்தியாகச் சித்திரிக்கப்பட்டதும் இவ்வாண்டின் சுவாரசியமான புதுமைகள்,” என்றும் யுவன் கூறினார்.
காஸா, மேற்குக்கரை விவகாரம் போன்ற உலக நடப்புகளுக்கு இடையே வரவுசெலவுத் திட்டத்தில் வெளிநாட்டு மனிதநேய நிவாரண உதவிகளுக்கு நன்கொடை வழங்கும் சிங்கப்பூரர்களுக்கு 100 விழுக்காடு வரிக்கழிவு வழங்கப்படுவதற்கான அறிவிப்பு தம் கவனத்தை ஈர்த்தது என்று கூறினார் வரவுசெலவுத் திட்டத்தை இவ்வாண்டு முதன்முறையாக கவனிக்கும் பல்கலைக்கழக மாணவி கிரிஷ்மித்தா ஷிவ்ராம், 20.
“உதவ நினைக்கும் சிங்கப்பூரர்களை இந்த அறிவிப்பு ஊக்குவிக்கும். அனைத்துலகச் சமூகத்தில் சிங்கப்பூரின் குரல் இதனால் ஓங்கி ஒலிக்கும் என்று நம்புகிறேன்,” என்று கிரிஷ்மித்தா கூறினார்.
பட்டயம் பெறும் தொழில்நுட்பக் கல்விக்கழக மாணவர்களுக்கு மத்திய சேமநிதிக் கணக்கில் கூடுதல் தொகை கொடுக்கப்படுவதை தம் நண்பர்கள் வரவேற்பர் என்றும் அவர் கூறினார்.