ஊடுருவப்பட்ட பேபால் கணக்குகளைப் பயன்படுத்தி இணையக் குற்றவாளிகள் பரிவர்த்தனைகள் செய்வதாக காவல்துறையும் சிங்கப்பூர் இணையப் பாதுகாப்பு முகவையும் எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஜனவரி 1ஆம் தேதிக்கும் பிப்ரவரி 9ஆம் தேதிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் இதுதொடர்பாக 27 புகார்கள் அளிக்கப்பட்டதாக காவல்துறை தெரிவித்தது.
பாதிக்கப்பட்டோருக்கு பேபால் தளத்திலிருந்து தானியங்கி முறையில் அறிவிப்புகள் கிடைத்ததாகத் தெரிவிக்கப்பட்டது. அவை மின்னஞ்சல் வாயிலாகவோ பேபால் செயலியின் தகவல் தளம் மூலமாகவோ அனுப்பிவைக்கப்பட்டன.
பேபால் கணக்கு வைத்திருப்பவரின் தனிநபர் விவரங்கள் மாற்றப்பட்டது, பரிவர்த்தனைகளுக்கான ரசீது போன்ற அறிவிப்புகள் அனுப்பிவைக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
கணக்குகளைச் சரிபார்த்தபோது வேறு எங்கிருந்தோ பணம் அனுப்பிவைக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரியவந்தது. அல்லது முன்பின் அறிமுகமில்லா வங்கிக் கணக்குகளுக்குத் தங்கள் பேபால் கணக்குகள் மூலம் பணம் அனுப்பிவைக்கப்பட்டதை அவர்கள் உணர்ந்தனர்.
அதையடுத்து, பணத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி அந்த இணையக் குற்றவாளிகள் கேட்டுக்கொண்டனர்.
அதன் பிறகு, அதற்கான பணம் தங்கள் பேபால் தளத்திலிருந்து எடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்டோருக்கு தானியங்கி அறிவிப்பு அனுப்பிவைக்கப்பட்டது.
போதுமான பாதுகாப்பு தராத மறைச்சொற்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் பயனாளர் விவரம் போன்ற தனிநபர் விவரங்களைக் கேட்கும் இணையப்பக்கங்களுக்குச் செல்ல வேண்டாம் என்றும் பொதுமக்கள் அறிவிறுத்தப்படுகின்றனர்.